From Wikipedia, the free encyclopedia
பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, மத்திய ஆப்கனிஸ்தானின், பாமியான் மாகாணத்தின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச் சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பாரிய (மிகப்பெரிய) புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஒன்றைப் பெரிய புத்தர் மற்றொன்றைச் சிறிய புத்தர் எனவும் அழைப்பர். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச் சிலைகள், காபுலில் இருந்து வடமேற்கே 230 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்திருந்தன. இச் சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் (காந்தாரக்கலை) சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின.
பாமியன் பள்ளத்தாக்கின் பண்பாட்டு நிலத்தோற்றமும் தொல்லியல் எச்சங்களும் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, ii, iii, iv, vi |
உசாத்துணை | 208 |
UNESCO region | ஆசிய-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2003 (இருபத்தேழாவது தொடர்) |
ஆபத்தான நிலை | 2003- |
பருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன.[1] சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்பட்டிருந்த இடங்கள் ஆகும்.
இஸ்லாமிய ஷாரியாச் சட்டத்தின் படி சிலைகள் தடை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி, தலிபான்களின் தலைவரான முல்லா முகம்மத் ஓமார், இப் புத்தர் சிலைகளை உடைக்க ஆணையிட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாணையை ஏற்று அந் நாளைய தலிபான் அரசு 2001 ஆம் ஆண்டில் இச் சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இச் சிலைகளை மீள அமைப்பதற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளன.
பாமியன், இந்தியாவின் காந்தார அரசின் கீழ் இருந்தது. இது, கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை, சீனாவின் சந்தைகளையும், மேற்காசியப் பகுதிகளையும் இணைத்த பட்டுப் பாதையில் அமைந்திருந்தது. இவ்விடம், பல இந்து, பௌத்த துறவி மடங்களின் அமைவிடமாக இருந்ததுடன், சமயம், மெய்யியல், இந்திய-கிரேக்கக் கலை ஆகியவற்றின் மையமாகவும் விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டு முதல், ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது.
இப்பகுதி மடங்களில் புத்த சமயத் துறவிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழிடங்கள் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட சிறிய குகைகள் ஆகும். பல துறவிகள் தங்கள் குகைகளைப் புத்தர் சிலைகளாலும், ஒளிர் நிறங்கள் தீட்டப்பட்ட சுவரோவியங்களாலும் அழகூட்டியிருந்தனர். இவற்றுள் முதன்மையானவை பாரிய, நிற்கும் புத்தர் சிலைகளான வைரோசனர் சிலையும், சாக்கியமுனி சிலையும் ஆகும். இவற்றுள் முதல் சிலை 55 மீட்டர்களும் அடுத்தது 37 மீட்டர்களும் உயரம் கொண்டவை. இவையே உலகின் மிகப்பெரிய நிற்கும் புத்தர் சிலைகள் ஆகும். இப் பகுதியின் மிகப் பிரபலமான பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கிய இச் சிலைகள் இருந்த இடமும், சூழவுள்ள பண்பாட்டு நிலத்தோற்றம், தொல்லியல் எச்சங்கள் அனைத்தும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
சிறிய சிலை கி.பி 507 ஆம் ஆண்டிலும், பெரியது 554 ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டவை ஆகும். இவை குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் அவர்கள் பேரரசுகள் உச்சநிலையில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. மேற்குறிப்பிட்ட இனத்தவரே தற்கால ஆப்கனிஸ்தானில் அதிகமாகத் துயரங்களுக்கு உள்ளாகிய ஹசாரா இனத்தவரின் முன்னோர்களாவர். ஹசாரா இனத்தினரின் உடலமைப்பும், முக அமைப்பும், அங்குள்ள குகைகளிலும் பிற சின்னங்களிலும் காணப்படும் சுவரோவியங்களில் காண்பவற்றை ஒத்தவையாக உள்ளன. கி.பி 630 ஆம் ஆண்டில் இப் பகுதியூடாகச் சென்ற சுவான்சாங் (Xuanzang) என்னும் சீனப் பயணி, பாமியனை ஒரு பௌத்த மையமாக விவரித்துள்ளார். இவரது கூற்றுப்படி இங்கே பத்துக்கு மேற்பட்ட துறவி மடங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட துறவிகளும் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு புத்தர் சிலைகளும், பொன்னாலும், மணிகளாலும் அழகுபடுத்தப் பட்டிருந்ததாகவும் அவரது குறிப்புக்கள் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விடத்தில் படுத்த நிலையில் இவ்விரண்டையும் விடப் பெரிய புத்தர் சிலையொன்று இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு காலத்தில் முற்றாகவே அழிந்து விட்டதாகக் கருதப்படுகின்றது.
11 ஆம் நூற்றாண்டில் மேற்கு இந்தியாவின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானையும் கஜினி முகமது கைப்பற்றியபோது, துறவி மடங்களும், பிறவும் கொள்ளையிடப்பட்டு அழிக்கப்பட்ட போதும், இவ்விரு புத்தர் சிலைகளையும், சுவரோவியங்களையும் எதுவும் செய்யவில்லை. நாதிர் ஷா இச்சிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினான். எனினும் பின்னர் பல நூற்றாண்டுகளாக இச் சிலைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படுத்தப்படவில்லை.
1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முல்லா முகம்மது ஓமார், பாமியன் புத்தர் சிலைகளை பாதுகாப்பதற்கு ஆதரவாக ஆணையொன்றை வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தற்போது புத்த சமயத்தவர் எவரும் இல்லாததால் இச் சிலைகளை வணங்குவதற்குரிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இச்சிலைகள் வெளிநாட்டினரின் வருகை மூலமாக நாட்டுக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பனவாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் அரசு கருதுவதாகவும், அதனால், தலிபான்கள் அவற்றை அழிக்காமல் பாதுகாப்பார்கள் எனவும் அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் தீவிர மதவாதிகள், அந் நாட்டின் இஸ்லாமுக்கு எதிரான பிரிவினரை இலக்காகக் கொண்டு எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கினர். மிக விரைவிலேயே தாலிபான் எல்லாவித உருவச் சிலைகளையும், இசை, விளையாட்டு என்பவற்றையும், தொலைக்காட்சியையும் கூட இஸ்லாமியச் சட்டங்களுக்கு எதிரானவை எனக் கூறித் தடை செய்தனர். கலாச்சார அமைச்சரான கதிரத்துல்லா கமால், அசோசியேட்டட் பத்திரிகை நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 400 மதத் தலைவர்கள் கூடி, புத்தர் சிலைகள் இஸ்லாத்துக்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அறிவித்தார்.
யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இது தொடர்பாகக் கூட்டப்பட்ட 54 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய மகாநாட்டு அமைப்பின் கூட்டத்தின்போது, தலிபான்களின் ஆட்சியை அங்கீகரித்த பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட எல்லா நாடுகளும் தலிபானின் நடவடிக்கைக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இணைந்துகொண்டனர்.
மார்ச் தொடக்கம் முதலாக, டைனமைட்டு வெடி பொருள்களைப் பயன்படுத்திப் பல வாரங்களாக உடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பல படிகளாக இடம்பெற்றது. முதலில், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும், கனரகப் பீரங்கிகளையும் பயன்படுத்தி சிலைகளைத் தாக்கினர். பின்னர் தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகளை அடிப்பகுதியில் வைத்து வெடிக்க வைத்தனர். மேலும் அப்பகுதி மக்களில் சிலரை மலை மீது ஏற்றி சிலைகளில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பிளவுகளில் வெடிபொருள்களைப் பொருத்தி வெடிக்கவைத்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.