பயனர்:George46/மணல்தொட்டி
From Wikipedia, the free encyclopedia
உயிர்த்தெழுந்த இயேசு காட்சியளித்தல் (Resurrection appearances of Jesus) என்ற தலைப்பில், இயேசு சிலுவையில் இறந்து, கல்லறையில் அடக்கப்பட்டு, மீண்டும் உயிர்பெற்றெழுந்தபின், விண்ணகம் செல்லுமுன் சீடர்களுக்குக் காட்சியளித்து அவர்களோடு உறவாடினார் என்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தி எடுத்துக் கூறப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3a/Caravaggio.emmaus.750pix.jpg/640px-Caravaggio.emmaus.750pix.jpg)
இவ்வாறு இயேசு காட்சியளித்த செய்தி கீழ்வரும் நற்செய்திப் பகுதிகளில் உள்ளது:
- மத்தேயு 28:8-20
- மாற்கு 16:9-20
- லூக்கா 24:13-49
- யோவான் 20:11-21:25
- திருத்தூதர் பணிகள் 1:1-11
- 1 கொரிந்தியர் 15:3-9
இந்த முதன்மை ஆதாரங்களுள் 1 கொரிந்தியர் காலத்தால் மிக முற்பட்டது என்பது அறிஞர் கருத்து.[1]அக்கடிதத்தை புனித பவுல் கி.பி. சுமார் 55ஆம் ஆண்டில் எழுதினார்.[2]புற விவிலிய நூலான "எபிரேயர் நற்செய்தி" (Gospel of the Hebrews) இயேசுவின் சகோதரரான யாக்கோபுக்கு உயிர்த்தெழுந்த இயேசு காட்சியளித்தார் என்பதை விவரிக்கிறது.[3]
மத்தேயு நற்செய்திப்படி, இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்து, கல்லறை அருகே மகதலா மரியாவுக்கும் மற்றொரு மரியாவுக்கும் காட்சியளித்தார். பின்னர் யூதாசு தவிர மற்ற பதினொரு சிடர்களும் கலிலேயாவின் ஒரு மலைக்குச் சென்று அங்கே இயேசுவைக் காட்சியில் காண்கின்றனர். அவர்களுக்கு, "தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு அளித்து அனைத்து மக்களையும் சீடராக்கும்" பொறுப்பை இயேசு கொடுக்கிறார்.
லூக்கா நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்குக் காட்சியளித்து, அவர்களோடு உணவருந்திய செய்தி குறிக்கப்படுகிறது.[4]அவர்கள் எருசலேமில் காத்திருக்கும்படி இயேசு கூறுகிறார். பிறகு இயேசு விண் ஏகுகிறார். சீடர்களும் இயேசு பற்றிய நற்செய்தியை எருசலேமிலிருந்து தொடங்கி உலகெங்கிலும் அறிவிக்கப் புறப்படுகிறார்கள்.
லூக்கா நற்செய்தியின் ஆசிரியரே எழுதிய திருத்தூதர் பணிகள் நூலில், இயேசு தம் சாவுக்குப் பின் சீடர்களுக்கு உயிரோடு தோன்றுகிறார். அவர்களோடு நாற்பது நாள்கள் தங்கியிருக்கிறார். பின்னர் விண்ணகம் எழுந்துசெல்கின்றார். அதே திருத்தூதர் பணிகள் நூலில் புனித பவுல் மனமாற்றம் அடைந்த நிகழ்ச்சியில் இயேசு அவருக்குத் தோன்றுகிறார்.
யோவான் எழுதிய நற்செய்தியின்படி, வெறுமையான கல்லறையின் அருகே இயேசுவை மரியா மட்டுமே காண்கிறார். அப்போது இயேசு மரியாவிடம் “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை” என்று கூறுகிறார் (யோவான் 20:17). அதன் பிறகே இயேசு ஏனைய சீடர்களுக்குத் தோன்றுகிறார். கதவு மூடியிருந்த போதும் அவர் சீடர்கள் இருந்த அறையில் அவர்களுக்குத் தோன்றி தோமாவிடம் தமது காயங்களைத் தொட்டுப் பார்க்குமாறு கூறுகிறார். அதன் பிறகு இயேசு பேதுருவுக்குத் தோன்றி, அவரிடம் தமது ஆட்டுக்குட்டிகளை மேய்க்கின்ற பொறுப்பை ஒப்படைக்கிறார்.
மாற்கு நற்செய்தியின் இறுதியான 16ஆம் அதிகாரத்தில் இயேசுவின் காட்சிகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. சீடர்களுக்கு இயேசு தோன்றியதை மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் விரிவாகத் தந்துள்ளனர்.