![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Nobel_Peace_Center_12.jpg/640px-Nobel_Peace_Center_12.jpg&w=640&q=50)
நோபல் அமைதி மையம்
From Wikipedia, the free encyclopedia
நோபல் அமைதி மையம் (Nobel Peace Center, நோர்வே: Nobels Fredssenter) நோர்வேயின் ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் அதன் உன்னதக் கொள்கைகளை வெளிப்படுத்த அமைக்கப்பட்ட காட்சியகம் ஆகும். இந்த மையம் போர், அமைதி, பிணக்குத் தீர்வு குறித்து பண்பாடும் அரசியலும் கலந்த ஈடுபாடு, உரையாடல் மற்றும் நினைப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் அரங்கமாகவும் விளங்குகிறது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Nobel_Peace_Center_12.jpg/640px-Nobel_Peace_Center_12.jpg)
இந்த மையம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களையும் அவர்களது பணிகளையும் காட்சிப்படுத்துவதோடு ஆல்பிரட் நோபல்லின் வரலாற்றையும் மற்ற நோபல் பரிசுகளைக் குறித்த குறிப்புகளையும் வழங்குகிறது. இதற்காக பல்லூடக ஊடாடும் தொழினுட்பம், கண்காட்சிகள், சந்திப்புகள், விவாதங்கள், நாடகங்கள், கச்சேரிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன; வழமையான வழிகாட்டப்பட்ட சுற்றுலாவும் கல்வித் திட்டங்களும் கூடுதலாக உள்ளன.
நோபல் அமைதி மையம் நோபல் பவுண்டேசன் குழுமத்தின் ஓர் நிறுவனமாகும். இது பன்னாட்டு நிர்வாகத்தையும் நோபல் பரிசு வழங்கும் விழாவையும் ஒருங்கிணைக்கிறது. பென்டே எரிக்சன் நோபல் அமைதி மையத்தின் தற்போதைய இயக்குநராவார்.
நோபல் அமைதி மையத்தை சீர்மிகு அரசர் நோர்வேயின் ஐந்தாம் ஹரால்டு 2005இல் துவக்கி வைத்தார். துவக்க விழாவிற்கு நோர்வே மற்றும் சுவீடனின் அரச குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இதுவரை (1 அக்டோபர் 2009 வரை) 400,000 வருகையாளர்கள் வந்துள்ளனர். 1872இல் கட்டப்பட்ட ஓசுலோ மேற்கு தொடருந்து நிலையத்தில் (1989இல் அது நிறுத்தப்பட்ட பிறகு) நோபல் அமைதி மையம் அமைந்துள்ளது. ஓசுலோ ஹாலை அடுத்து துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு அமைந்துள்ள இந்த மையத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 10 அன்று அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது.[2]
பிரித்தானிய கட்டிட வடிவமைப்பாளர் டேவிட் அட்யாயே மையத்தின் வடிவமைப்பிற்கும் வண்ணக்கலவைக்கும் பொறுப்பாவார்.அமெரிக்க வடிவமைப்பாளர் டேவிட் இசுமால் அதிநவீன கருவி அமைப்புகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். நோர்வேயின் பண்பாட்டு அமைச்சகம், தனியார் புரவலர்கள், நுழைவு கட்டணம் மூலமாக இந்த மையம் நிதி பெறுகிறது. தற்காலிக கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.[3]