நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்
போலந்து கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் (1473-1543) / From Wikipedia, the free encyclopedia
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு (/koʊˈpɜːrnɪkəs, kə-/;[2][3][4] Niklas Koppernigk; போலிய: Mikołaj Kopernik;[5] இடாய்ச்சு மொழி: Nikolaus Kopernikus; பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானியல் அறிஞரான தாலமி கி.பி. 140இல், புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. இதற்கு முன்பு அரிசுட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால், இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானதெனக் கருதப்பட்டதால், அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என்று ஆராய்ந்து கூறினார். இவர் போலந்தில் பிறந்தவர். சிலர், இவர் செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்றும் கருதுகிறார்கள்.
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் | |
---|---|
டொரொன் ஓவியம், இது டொரொன் நகர மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.[1] | |
பிறப்பு | (1473-02-19)19 பெப்ரவரி 1473
, தோர்ன், போலந்து |
இறப்பு | 24 மே 1543(1543-05-24) (அகவை 70), புரொம்போர்க், போலந்து |
துறை | கணிதம், வானியல், மருத்துவம், பொருளியல் |
கல்வி கற்ற இடங்கள் | கிராக்கோவ் பல்கலைக்கழகம், பொலோனாப் பல்கலைக்கழகம், பாதுவாப் பல்கலைக்கழகம், ஃபெராராப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சூரியமையக் கொள்கை, கோப்பர்னிக்கஸ் விதிகள் |
கையொப்பம் |
இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர்[6], கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார்.