தாவரவியல்
From Wikipedia, the free encyclopedia
தாவரவியல் (Botany) என்பது தாவர அறிவியல் அல்லது தாவர உயிரியல் என்று அழைக்கப்படுகிறது. இது தாவரங்களின் வாழ்க்கையை பற்றி படிக்கக் கூடிய அறிவியலாகும்.இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் தாவரவியலாளர் அல்லது தாவர அறிவியலார் என்று அழைக்கப்படுகின்றனர்.பூஞ்சைகளைப் பற்றி படிக்கக்கூடிய பூசணவியல் மற்றும் பாசிகளை பற்றி படிக்கும் துறையான பாசியியல் ஆகிய இரண்டு துறைகளும் பாரம்பரியமாக தாவரவியலில் உள்ளடங்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி தோராயமாக 410,000 நிலவாழ் தாவரங்களையும் 391,000 (369,000 பூக்கும் தாவரங்கள் உள்ளடக்கிய) கடத்தும் இழையங்கள் கொண்ட தாவரங்களையும், 20,000 பாசியினத் தாவரங்களையும் தாவரவியலாளர்கள் கண்டாய்ந்துள்ளனர்.[1]
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனித இனம் தாவர இனங்களை மூலிகைகளாக பயன்படுத்தி வந்திருக்கிறது. பின்னர் சமையலுக்காக, மருத்துவத்திற்காக பயன்படுத்தும் தாவரங்களையும், நச்சுத் தாவரங்களையும் வகைப்படுத்தி அறிந்திருந்தனர். இது தாவரவியலை அறிவியலின் பழமையான துறையாக விளங்கச்செய்கிறது.[2]