தாய்ப்பாலூட்டல்
From Wikipedia, the free encyclopedia
தாய்ப்பாலூட்டல் (Breastfeeding) என்பது பிறந்த குழந்தைக்கு நேரடியாகத் தாயின் முலையிலிருந்து பால் கொடுக்கப்படும் முறையாகும். குழந்தைகளில் காணப்படும் உறிஞ்சி உண்ணும் தொழிற்பாடு இந்த தாய்ப்பாலூட்டலுக்கு உறுதுணையாக உள்ளது. பொதுவாகக் குழந்தைக்கான வேறு மேலதிக உணவுகளை வழங்காமல் தாய்ப்பாலூட்டல் முறையால் மட்டுமே கிட்டத்தட்ட 6 மாதங்கள் உணவூட்டல் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற போதுமானதாக இருக்கும்.
மனிதரில் குழந்தைகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவுகளிலேயே மிகவும் உடல்நலம் பேணக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்[1]. ஆனாலும் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்சு நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டாமல் இருப்பது நல்லது.
தாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், உடல் நலம் உணவுக்கான மேலதிக செலவுகளையும் குறைக்கிறது[2][3][4]. அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பிறந்த குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பு பொதுவாக செயற்கையான உணவூட்டலினாலேயே நிகழ்கிறது[5]. துறைசார் வல்லுனர்கள் அனைவரும் தாய்ப்பாலூட்டல் மிகவும் நிச்சயமாக நலம் தருவதுதான் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு காலம் தாய்ப்பாலூட்டுவது சிறந்தது, பிறந்த குழந்தைக்கு செயற்கை முறை உணவூட்டல் எப்படியான இடர்களைத் தரக் கூடியது போன்ற விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனர்[6][7][8].
உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாதமியும் (American Academy of Pediatrics AAP) குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் கடைசி ஓர் ஆண்டுக்கு, முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன[9][10]. தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, செயற்கையாக உணவூட்டும் முறையில் உள்ள இடர்களைக் களைவதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன[7].