தக்சசீலா
From Wikipedia, the free encyclopedia
தட்சசீலம் (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும். தக்சீலா இசுலாமாபாத் தலைநகரப் பகுதி மற்றும் ராவல்பிண்டியின் வடமேற்கே 32 km (20 mi) தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து 549 மீட்டர்கள் (1,801 அடி) உயரத்தில் உள்ளது. இதனருகில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஜௌலியன் விகாரை உள்ளது.
தக்சசீலா | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii, vi |
உசாத்துணை | 139 |
UNESCO region | ஆசிய பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (4th தொடர்) |
இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. தக்சசீலா என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. இந்து மற்றும் புத்த சமயத்தினருக்கு மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் இராமனின் தமையன் பரதனின் மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.[1]
இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
வரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்ளது:
1. உத்தரபாதை, "வடக்குச் சாலை" - பின்னாளில் GT சாலையாக உருமாறிய இராசபாட்டை - காந்தார நாட்டையும் கிழக்கில் கங்கைச் சமவெளியில் அமைந்த மகத நாட்டின் பாடலிபுத்திரத்தையும் இணைத்தது.
2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.
3. சிந்து பாதை காஷ்மீர் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்ரீநகர், மனேசெரா,அரிப்பூர் வழியே குஞ்செராப் கணவாய் மூலமாக சீனத்திற்கும் தெற்கே இந்தியப் பெருங்கடலுக்கும் [2] அமைந்திருந்தது. தற்போதைய காரகோரம் நெடுஞ்சாலையை இப்பாதை அன்றே உள்ளடக்கியிருந்தது.
1980ஆம் ஆண்டு, யுனெசுகோ தக்சீலாவை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது. [3] பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக த கார்டியன் கணித்துள்ளது.[4]