ஜமீந்தார்
From Wikipedia, the free encyclopedia
சமின்தார் அல்லது நிலக்கிழார் (zamindar) இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களையும், உழவர்களையும் கொண்டிருப்பர்களைக் குறிக்கும்.
பெருநிலக்கிழார்கள் விளைநிலங்களை, குடியானவர்களுக்கு குத்தகைக்கு விட்டு, விளைச்சலில் கிடைக்கும் தானியங்களின் ஒரு பகுதியை வரியாக அரசுப் படைகளின் பராமரிப்புச் செலவிற்கு அரசிற்கு செலுத்துவர். பிரித்தானிய இந்தியாவில், சமீந்தார்கள் கொண்டிருக்கும் நிலங்களின் பரப்பளவுக்கு ஏற்ப, சமத்தான மகாராசா , இராசா போன்ற அடைமொழிகளுடன் அழைக்கப்பட்டனர்.
முகலாயர் ஆட்சிக் காலத்தில் சமீந்தார்கள் அதிகார வர்க்கத்தினராக இருந்தனர். அக்பர் காலத்தில் போர்க் குதிரைகளையும் மற்றும் குதிரை வீரர்களின் பயிற்சிக்கும், பராமரிப்புச் செலவிற்கும் மன்சப்தாரி முறை[1] எனும் சமீந்தாரி முறை கொண்டு வரப்பட்டு, விளைநிலங்கள் ஒதுக்கப்பட்டது. நிலங்கள் மன்சப்தாரி முறையில் அரசவைக் குடும்ப உறுப்பினர்களுக்கும், அரசவைப் பிரபுகளுக்கும் வழங்கப்பட்டது..[2][3][4][5]
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், ஆங்கிலேயரின் ஆட்சி அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட 572 சமத்தான மன்னர்கள் மற்றும் சமீந்தார்கள் இருந்தனர். எடுத்துக்காட்டாக, பரோடா, பவநகர், ஐதராபாத்து, மைசூர், திருவிதாங்கூர் போன்ற பெரிய சமத்தானங்களும், பரீத்கோட், பட்டியாலா, மாலேர், புதுக்கோட்டை போன்ற சிறிய சமத்தானங்களும், இராமநாதபுரம், பொப்பிலி போன்ற பெருநிழக்கிழார்களும் செல்வாக்குடன் விளங்கினர்.
சுதேச சமத்தான மன்னர்களும், சமீந்தார்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விளைநிலங்களிலிருந்து கிடைக்கும் தானியங்களின் ஒரு பகுதியை குடியானவர்களிடமிருந்து வரியாக வசூலித்து ஆங்கிலேய அரசுக்கு கப்பமாகச் செலுத்தினர்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் சமீந்தார் ஆட்சி முறையும் சமத்தானங்களின் ஆட்சிமுறையும் இந்தியாவில் ஒழிக்கப்பட்டு, அனைத்து விளைநிலங்கள் மீதான வரிகளை இந்தியாவின் மாநில அரசுகள் நேரடியாக, வருவாய்த் துறை மூலம் வசூலிக்கிறது.