சுடுமண் சிற்பம்
From Wikipedia, the free encyclopedia
சுடுமண் சிற்பங்கள் (Terracotta) என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களாகும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் என்பதனால் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. மண்பாண்டங்களும் இம்முறையிலேயே செய்யப்படுகின்றன. இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது. துரு ஏறாது. அவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசுவர். சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை வழக்கிலிருக்கின்றன. சுதைச் சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில் ஒன்றாகும்.
டெர்ரா என்றால் மண் என்று பொருள்[1]. மண்ணால் சிற்பம் செய்வது[2], உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலை ஆகும். இது, மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதனை சூளையில் வேகவைத்து, பல்வேறு வடிவங்களைச் செய்யும் அபூர்வமான கலையாகும்.
பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள், பிரபலமான மனிதர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் சுடுமண் சிற்பங்களாக அந்த கால மக்கள் உருவாக்கினர். இவை பல்லாயிரம் ஆண்டுகளானாலும் வெயிலாலும் கடுமையான மழையினாலும் சிறிதளவும் சிதைவுறாமல் இருக்கும்.
சுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப்படுகின்றன. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச் செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப்படுவதாகும்.