சீனப் பெருஞ் சுவர்
From Wikipedia, the free encyclopedia
சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். இதில் சில சுவர்கள் 7ஆம் நூற்றாண்டுப் பகுதியின் துவக்கத்தில் கட்டப்பட்டதாகும்.[1] பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.
சீனப் பெருஞ் சுவர் The Great Wall | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | காலச்சாரம் சார் |
ஒப்பளவு | i, ii, iii, iv, vi |
உசாத்துணை | 438 |
UNESCO region | ஆசியா பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11வது தொடர்) |
இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.