கோரி சுல்தானகத்தின் சுல்தான் (அண். 1173 - 1206) From Wikipedia, the free encyclopedia
முயீசதீன் முகம்மது இப்னு சாம் (பாரசீக மொழி: معز الدین محمد بن سام), (1144 – மார்ச் 15, 1206), என்பவர் கோரி அரசமரபைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளர் ஆவார். இவர் பொதுவாக கோரின் முகம்மது அல்லது எளிமையாக முகம்மது கோரி என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போதைய ஆப்கானித்தானின் நடுப் பகுதியில் உள்ள கோர் மாகாணத்தை மையமாகக் கொண்டு 1173 முதல் 1206 வரை ஆட்சி புரிந்தார். இவர் கோரி நிலப்பரப்புகளை கிழக்கு நோக்கி விரிவாக்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தார். அது இவருக்குப் பின்னும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முஸ்லிம் அரசமரபுகளின் கீழ் நீடித்திருந்தது. முகம்மது தன் அண்ணன் கியாதல்தீன் கோரியுடன் நடத்திய இரட்டை ஆட்சியின் போது கோரி அரசமரபானது அதன் நிலப்பரப்பு விரிவாக்கத்தில் உச்சத்தை அடைந்தது.
கோரின் முகம்மது | |
---|---|
சுல்தான்-இ-காஷி அல்-சுல்தான் அல்-ஆசம் சிக்கந்தர் அல்-தானி (இரண்டாம் அலெக்சாந்தர்) | |
கோரின் முகம்மதுவின் காசுனியைச் சேர்ந்த தங்க நாணயம், நடு ஆசியப் புழக்கத்திற்காக தற்போதைய ஆப்கானித்தானில் அச்சடிக்கப்பட்டது | |
கோரிப் பேரரசின் சுல்தான் | |
முன்னையவர் | கியாதல்தீன் முகம்மது |
பின்னையவர் | கோர்: கியாதல்தீன் மகுமூது காசுனி: தாசதீன் இல்திசு இலாகூர்: குத்புத்தீன் ஐபக் வங்காளம்: பக்தியார் கில்ஜி முல்தான்: நசீருதீன் கபாச்சா |
ஆட்சிக்காலம் | 1173–1203 (தன் அண்ணன் கியாதல்தீன் முகம்மதுவுடன் இணைந்து ஆட்சி) |
ஆட்சிக்காலம் | 1203–1206 (தனி ஆட்சியாளராக ஆட்சி) |
பிறப்பு | 1144 கோர் (தற்கால ஆப்கானித்தான்) |
இறப்பு | 15 மார்ச்சு 1206 61–62) தாமியக், ஜீலம் மாவட்டம் (தற்கால பாக்கித்தான்) | (அகவை
புதைத்த இடம் | காசுனி (தற்கால ஆப்கானித்தான்) |
மரபு | கோரி அரசமரபு |
தந்தை | முதலாம் பகாவல்தீன் சாம் |
மதம் | சன்னி இசுலாம் |
ஓர் இளவரசனாகவும், கோரி அரசமரபின் தெற்குப் பகுதியின் ஆளுநராகவும் தன் ஆரம்ப இராணுவ வாழ்க்கையின் போது முகம்மது பல்வேறு திடீர்த் தாக்குதல்களுக்குப் பிறகு ஒகுஸ் பழங்குடியினத்தை அடிபணிய வைத்தார். காசுனியைக் கைப்பற்றினார். அங்கு இவருக்கு கியாசுதீன் கோரி முடி சூட்டி வைத்தார். கியாசுதீன் கோரி 1163 முதல் தன் தலைநகரான பிரோசுகோக்கில் இருந்து ஆட்சி செய்து வந்தார். 1175இல் கோரி முகம்மது சிந்து ஆற்றைக் கடந்தார். கோமல் கணவாய் வழியாகப் பயணித்து கர்மதிய ஆட்சியாளர்களிடமிருந்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே முல்தான் மற்றும் ஊச் நகரங்களைக் கைப்பற்றினார். அதற்குப் பிறகு முகம்மது முல்தான் மற்றும் ஊச் வழியாக அணிவகுத்து 1178இல் தற்போதைய குசராத்தை அடைந்தார். அங்கு இவரது படைகள் தெற்கு ஆரவல்லி மலைத்தொடரின் அபு மலையின் அடிவாரத்தில் பதானின் முலராஜா சோலாங்கியால் தலைமை தாங்கப்பட்ட இராசபுத்திரத் தலைவர்களின் ஒரு கூட்டமைப்பால் தோற்கடிக்கப்பட்டன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்தியாவுக்கு தான் வரும் வழியை மாற்றும் நிலைக்கு இவர் தள்ளப்பட்டார். எனவே கோரி முகம்மது கசனவியர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். 1186ஆம் ஆண்டு கசனவிய அரசமரபை அழித்தார். பெரும்பாலான பஞ்சாப் பகுதியுடன் மேல் சிந்து சமவெளியையும் கைப்பற்றினார். வடமேற்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு, கோரி முகம்மது வட இந்தியாவுக்கான பாரம்பரிய வழியான கைபர் கணவாய் வழியாக நுழைந்தார்.
1191இல் இவரது படைகள் தரைன் என்ற இடத்திற்கு அருகே பிருத்திவிராச் சௌகானால் தலைமை தாங்கப்பட்ட ஒரு இராசபுத்திரக் கூட்டமைப்பால் தோற்கடிக்கப்பட்டன. எனினும், 1192இல் துருக்கிக் குதிரை வில்லாளர்களின் ஒரு பெரிய இராணுவத்துடன் கோரி முகம்மது திரும்பி வந்தார். அதே யுத்த களத்தில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றார். இதன் பிறகு சீக்கிரமே பிருத்திவிராச் சௌகானை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். இந்தியாவின் நடுக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக தரைன் யுத்தத்தில் இவர் அடைந்த வெற்றி கருதப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தியாவில் தனது இருப்பை இவர் குறைத்துக் கொண்டார். இப்பகுதியில் மேற்கொண்ட படையெடுப்புகளைத் தனது அடிமைத் தளபதிகளின் கீழ் கொடுத்தார். அவர்கள் வேகமாக உள்ளூர் இராச்சியங்கள் மீது திடீர்த் தாக்குதல்கள் நடத்தினர். கிழக்கே வங்காளம் வரை கோரி அரசமரபின் செல்வாக்கை விரிவாக்கினர்.
1203இல் இவரது அண்ணனின் இறப்பிற்குப் பிறகு கோரி முகம்மது பிரோசுகோக்கின் அரியணையிலும் ஏறினார். ஓர் ஆண்டுக்கு உள்ளாகவோ அல்லது ஓர் ஆண்டிலோ குவாரசமியப் பேரரசுடனான சண்டையில் குவாரசமியப் பேரரசுக்கு உதவி செய்ய வந்த தயங்குவால் தலைமை தாங்கப்பட்ட காரா கிதையின் படைகளுக்கு எதிராக அந்த்குத் யுத்தத்தில் கடுமையான தோல்வியைச் சந்தித்தார். நடு ஆசியாவில் இவரது விரிவாக்கத்தை இது நிறுத்தியது. இதன் விளைவாக மெர்வ் மற்றும் பெரும்பாலான குராசான் பகுதிகளை இழந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு எழுச்சியடைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கோரி முகம்மது ஒடுக்கினார். தனது தோல்விக்குப் பழி வாங்குவதற்காகத் திரான்சாக்சியானா மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்காக ஆமூ தாரியா ஆற்றில் படகுகளைக் கொண்டு ஒரு பாலத்தை உருவாக்கினார். எனினும், கோகர்களின் ஒரு புரட்சியானது பஞ்சாப் பகுதிக்கு வரும் நிலைக்கு இவரைத் தள்ளியது. தனது கடைசிப் படையெடுப்பின் போது கோகர் புரட்சியை இவர் மிருகத்தனமாக ஒடுக்கினார்.
திரும்பி வரும் வழியில் தம்யக் என்ற இடத்தில் சிந்து ஆற்றின் கரையில் கோரி முகம்மது 15 மார்ச் 1206ஆம் ஆண்டு அரசியல் கொலை செய்யப்பட்டார். மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, எதிரி இஸ்மாயிலி பிரிவைச் சேர்ந்த அரசியல் கொலை செய்பவர்களின் ஒரு குழு இவரைக் கொன்றது. இவரது இறப்பிற்குப் பிறகு இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவுக்குக் கீழ் குவாரசமியப் பேரரசின் வளர்ச்சி காரணமாக இவரது பேரரசு சிதைய ஆரம்பித்தது. 1215இல் இரண்டாம் அலாவுதீன் முகம்மது கோரிகளைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். எனினும், இந்தியத் துணைக்கண்டத்தில் இவரது படையெடுப்புகள் இவரது அடிமைத் தளபதி குத்புத்தீன் ஐபக்கால் நிறுவப்பட்ட அடிமை அரசமரபின் கீழ் தொடர்ந்து மேம்பாட்டுடன் நடைபெற்றது.
கோரி முகம்மது தற்போதைய ஆப்கானித்தானின் கோர் மாகாணத்தில் கோரி அரசமரபின் ஆட்சியாளரான முதலாம் பகாவல்தீன் சாம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சாம் தனது பூர்வீக நிலப்பரப்பைக் குறுகிய காலத்திற்கு ஆட்சி புரிந்தார். அவர் 1149ஆம் ஆண்டு இவர் குழந்தையாக இருந்த பொழுதே இறந்து விட்டார்.[1] இவரது பெயர் முயிசுதீன் சாம், சிகாபுதீன் கூரி, முகம்மது கோரி மற்றும் கோர் முகம்மது என்று பலவாறாக ஒலி பெயர்க்கப்படுகிறது.[2] தபாகத்-இ நசீரி நூலின் படி, இவரது இயற்பெயர் "முகம்மது" ஆகும். கோரி அரசமரபினர் இவரது பெயரை பேச்சு வழக்கில் "அமத்" என்று உச்சரித்தனர். இவரது குழந்தைப் பருவத்தின் போது இவரது கருப்பான நிறம் காரணமாக இவரது தாய் இவரை "ஜங்கி" என்று அழைத்தார். காசுனியில் இவர் அரியணைக்கு ஏறியதற்குப் பிறகு இவர் தனக்கு "மாலிக் சிகாபுதீன்" என்ற பெயரைக் கெடுத்துக் கொண்டார். குராசானை ஆக்கிரமித்த பிறகு இவர் "முயிசுதீன்" அல்லது "முயிசல்தீன்" என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார்.[3]
ஒரே நேரத்தில் எழுதப்பட்ட நூல்கள் முகம்மதுவின் சரியான பிறந்த தேதி குறித்து பெரிதாக எழுதவில்லை. எனினும் மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி, 1140ஆம் ஆண்டு பிறந்த கியாதல்தீன் முகம்மதுவுக்கு இவர் 4 ஆண்டு இளையவர் என்று குறிப்பிடுகிறார்.[4] ஜுஸ்ஜனியின் தகவலைச் சரியானது என எடுத்துக் கொண்டோமேயானால் முகம்மதுவின் பிறந்த ஆண்டு 1144 அல்லது 1145 ஆகும்.[5]
கோரி முகம்மது மற்றும் இவரது அண்ணன் கியாதல்தீன் ஆகிய இருவருமே ஆரம்ப ஆண்டுகளைக் கடுமையான துன்பங்களில் கழித்தனர். இவர்களது சிற்றப்பாவான அலால்தீன் உசைன் காசுனியில் தனது படையெடுப்புக்குப் பிறகு இவர்கள் இருவரையும் சஞ்சாவின் ஆளுநர்களாக ஆரம்பத்தில் பதவியில் அமர்த்தினார்.[6] எனினும், மாகாணத்தை இவர்கள் திறமையாக நிர்வகித்தது இவர்களது வளர்ச்சி குறித்து உசைனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய சொந்த அதிகாரத்திற்கு ஒரு சவாலாக வாய்ப்புள்ளவர்களாக இவர்களை அவர் கண்டார். தனது அண்ணன் மகன்களை கர்சிசுத்தான் கோட்டையில் சிறை வைக்க ஆணையிட்டார்.[6] எனினும், 1161இல் உசைனின் இறப்பிற்குப் பிறகு உசனின் மகன் சய்பல்தீன் முகம்மது இவர்களை விடுதலை செய்தார்.[7][8] பால்கின் நாடோடி ஒகுஸ்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தில் சய்பல்தீன் பிறகு இறந்தார்.[9][10]
இவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு, சஞ்சாவில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டதாக "தரிக்-இ-பிரிஷ்தா" என்ற நூல் குறிப்பிடுகிறது. எனினும், இந்நூலுக்கு முந்தைய நூலான "தபாகத்-இ நசீரி" இவர்களது துன்ப நிலையானது நிதி நிலைமை காரணமாகவே தொடர்ந்தது என்று குறிப்பிடுகிறது. இவர்களது உறவினரான அலாவுதீன் உசைனுக்கு அடிபணிந்தவராக பாமியான் வேள் பகுதியில் ஆட்சி செய்து வந்த பக்ருதீன் மசூதின் அவையில் இவ்வாறாக முகம்மது தஞ்சமடைந்தார்.[11]
சய்பல்தீனின் இறப்பிற்கு பிறகு கோரி குடும்பத்தின் மூத்த உறுப்பினராக அரியணைக்கு தன்னுடைய கோரிக்கையை பக்ருதீன் மசூத் வைத்தார். பக்ருதீனின் கிளர்ச்சியை ஒடுக்குவதில் தனது அண்ணனுக்கு முகம்மது உதவி செய்தார். பக்ருதீன் பல்கு மற்றும் ஹெறாத் தலைவர்களின் கூட்டணியுடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான ராணுவத்தை திரட்டினார். இந்த யுத்தத்தில் பல்கு மற்றும் ஹெறாத்தின் தலைவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும், 1163ஆம் ஆண்டு பாமியானில் பக்ருதீன் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.[12][13] பிறகு எஞ்சியிருந்த உள்ளூர் கோரி அதிகாரிகள் மற்றும் "மாலிக்குகளின்" ஆதரவுடன் இவரது அண்ணன் 1163ஆம் ஆண்டு சய்பல்தீனுக்கு பிறகு அரியணையில் அமர்ந்தார். இவரது அண்ணன் ஆரம்பத்தில் முகம்மதுவை ஒரு சிறிய அதிகாரியாகத் தன் அரசவையில் நியமித்தார். தன்னுடைய பதவியால் ஏற்பட்ட மகிழ்ச்சியின்மை காரணமாக முகம்மது சிசுதான் அரசவைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். அங்கு ஒரு முழு பருவத்தையும் கழித்தார். இருந்த போதிலும் இவரது சகோதரர் இவரை திருப்பி அழைத்து வர ஒரு தூதரை அனுப்பினார். கோரி நிலப்பரப்புகளின் தெற்கு பகுதிக்கு பொறுப்பாளராக இறுதியாக இவரை நியமித்தார். இந்நிலப்பரப்பில் இசுதியான் மற்றும் கசுரன் ஆகிய பகுதிகளும் அடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[14][15]
ஓர் இளவரசராக முகம்மதுவுக்கு இவரது ஆரம்ப கால படையெடுப்புகளின் போது ஒகுஸ் பழங்குடியினங்களை அடி பணிய செய்யுமாறு இவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அந்நேரத்தில் ஒகுஸ் பழங்குடியினங்களின் சக்தி மற்றும் செல்வாக்கானது மங்கத் தொடங்கியிருந்தது. இருந்த போதிலும் அவர்கள் விரிவான நிலப்பரப்புகளை தங்களது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருந்தனர்.[16] தனது மையமாக கந்தார் கிராமத்தை பயன்படுத்தி ஒகுஸ்களின் வேள் பகுதி மீது இவர் பலமுறை ஊடுருவல் நடத்தினர். பிறகு கியாதல்தீனுடன் இணைந்து அவர்களை தீர்க்கமாகத் தோற்கடித்தார். 1169ஆம் ஆண்டு காசுனியை வென்றார். தற்போதைய கிழக்கு ஆப்கானித்தானில் இருந்த சில நிலப்பரப்புகளையும் வென்றார்.[17][18][19] சீக்கிரமே 1173ஆம் ஆண்டு காசுனியில் முகம்மதுவுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இவரது அண்ணன் பிரோசுகோக்கிற்கு திரான்சாக்சியானாவில் மேற்கு நோக்கிய விரிவாக்கத்தை மேற்கொள்வதற்காக திரும்பி வந்தார்.[15] இறுதியாக காசுனி நகரத்தை பயன்படுத்தி முகம்மது சிந்து சமவெளி மற்றும் அதைத் தாண்டிய நிலப்பரப்புகளுக்கு ஒரு தொடர்ச்சியான செல்வம் ஈட்டிய தாக்குதல்களை மேற்கொண்டார். 1174ஆம் ஆண்டு தற்போதைய துருக்மெனிஸ்தானில் உள்ள சங்குரன் என்ற இடத்தைச் சேர்ந்த குஷ் இனத்தவர்களுக்கு எதிராக முகம்மது ஒரு தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். அவர்களை அடிபணியச் செய்தார்.[20]
1175இல் முகம்மது காசுனியிலிருந்து அணிவகுத்தார். செல்யூக்குகளின் ஒரு முன்னாள் தளபதியை தோற்கடித்ததற்கு பிறகு பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்த ஹெறாத் மற்றும் புசாங் ஆகியவற்றை தங்களது அரசில் இணைப்பதில் தன்னுடைய அண்ணனுக்கு உதவி புரிந்தார்.[21][15] கோரி சகோதரர்கள் தற்போதைய ஈரானுக்குள் முன்னேறினர். சிசுதானின் நசரித் அரசமரபை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கோரி அரசமரபின் முதன்மை நிலையை நசரித் ஆட்சியாளரான தாசல்தீன் மூன்றாம் ஆர்ப் இப்னு முகம்மது இப்னு நாசர் ஏற்றுக்கொண்டார். பிறகு கோரி அரசமரபினரின் போர்களில் அவர்களுக்கு உதவி புரிவதற்காக பலமுறை தன்னுடைய ராணுவங்களை அனுப்பி வைத்தார்.[13] இதற்கு பிறகு கியாதல்தீன் பல்கு மற்றும் குராசானில் இருந்த ஹெறாத்தைச் சுற்றி இருந்த நிலப்பரப்புக்களை கைப்பற்றினார்.[22]
கோரி சகோதரர்கள் இணைந்து ஆட்சி புரிந்து வந்தனர். இவரது அண்ணன் கியாதல்தீன் முகம்மது மேற்கு-நடு ஆப்கானித்தானத்தில் அமைந்திருந்த தன்னுடைய தலைநகரான பிரோசுகோக்கில் இருந்து குவாரசமியர்களுக்கு எதிராக ஒரு நீண்ட காலம் நடைபெற்ற பிரச்சனையில் ஈடுபட்டார். அதே நேரத்தில் கோரின் முகம்மது கோரி நிலப்பரப்புகளை கிழக்கு நோக்கி தன்னுடைய தலைநகரான காசுனியிலிருந்து இந்திய சமவெளிகளை நோக்கி விரிவாக்கம் செய்தார்.[24] இந்திய சமவெளிகளுக்குள்ளான ஊடுருவல்கள் மற்றும் சிந்து-கங்கைச் சமவெளியில் இருந்த செல்வச்செழிப்பு மிக்க இந்து கோயில்களை சூறையாடியதன் மூலம் கிடைத்த செல்வம் ஆகியவை முகம்மதுவுக்கு ஒரு பெரும் அளவிலான செல்வத்தை காசுனியில் வைத்திருக்கச் செய்தது. வரலாற்றாளர் ஜுஸ்ஜனியின் குறிப்பின் படி, முகம்மதுவின் அதிகாரிகளின் தகவலின் படி இவரிடம் 60,000 கிலோ எடையுள்ள தங்க நகைகள் உள்ளிட்ட செல்வங்கள் இருந்தன.[25]
கசினியின் மகுமூது முல்தானில் ஒரு சன்னி இசுலாமிய ஆளுநரை நியமித்தார். அவரது இறப்பிற்கு பிறகு இஸ்மாயிலிகளின் ஏழ்வர் பிரிவைச் சேர்ந்த கர்மாதியர்கள் முல்தானில் காலூன்றினர்.[26] கோரின் முகம்மது தனது இந்திய துணைக்கண்ட தாக்குதல்களை கர்மாதியர்களுக்கு எதிரான தாக்குதலின் மூலம் தொடங்கினார். 1175இல் கர்மாதிய ஆட்சியாளரான கபீபை முகம்மது தோற்கடித்தார். முல்தானை தனது அரசில் இணைத்துக்கொண்டார்.[27] முல்தானிலிருந்த கர்மாதிய சக்திக்கு ஒரு கடினமான தாக்கமாக இந்த தோல்வி அமைந்தது. இப்பகுதியில் கர்மாதியர்கள் மீண்டும் தங்களது செல்வாக்கை பெறவில்லை.[28]
முல்தானை வென்ற பிறகு முகம்மது உச்சை கைப்பற்றினார். செனாப் மற்றும் ஜீலம் ஆறுகள் இணையும் இடத்திற்கு தெற்கே உச் அமைந்திருந்தது. அல் கமில் பில் தரிக் தவிர்த்து அக்காலத்தை சேர்ந்த நூல்களில் இவரது உச் தாக்குதலானது விவரமாக குறிப்பிடப்படாமல் உள்ளது. இராசபுத்திரர்களுடன் தொடர்புடைய ஒரு புராணத்தால் உச்சில் இவரது தாக்குதலை குறித்த விவரங்கள் நூல்களில் ஒரு வேளை மழுங்கடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எவ்வாறாயினும், ஒரு பிந்தைய வரலாற்றாளரான பெரிஷ்தா தாக்குதலின் ஆண்டாக 1176ஐக் குறிப்பிட்டுள்ளார். 1204ஆம் ஆண்டு அந்த்குத் யுத்தத்தில் இறக்கும் வரை மாலிக் நசுருதீன் ஐதமிற்கு கீழ் உச்சானது கொடுக்கப்பட்டது. அதற்குப்பிறகு இப்பகுதி நசுருதீன் கபாச்சாவிற்கு கொடுக்கப்பட்டது.[29]
தன்னுடைய ஆரம்ப கால தாக்குதலின் போது முகம்மது பஞ்சாப் பகுதியை தவிர்த்தார். மாறாக சிந்து ஆற்றின் நடு மற்றும் கீழ் பகுதிகளை ஒட்டி இருந்த நிலங்கள் மீது கவனத்தை செலுத்தினார். இவ்வாறாக பஞ்சாப் பகுதியில் இருந்த கசனவியர்களை சுற்றிச் செல்லவும், வட இந்தியாவுக்கு ஒரு மாற்று வழியை திறக்கவும், தெற்கு நோக்கி தற்போதைய குசராத்தின் பதானுக்கு தனது கவனத்தை முகம்மது திருப்பினார்.[30] பதானுக்குள் நுழைவதற்கு முன்னர் மார்வார் பிரதேசத்தைச் சுற்றியிருந்த நடோல் கோட்டையை முற்றுகையிட்டார். கேலெனதேவாவிடமிருந்து ஒரு சிறு முற்றுகைக்குப் பிறகு நடோல் கோட்டையை கைப்பற்றினார். கிராதுவிலிருந்த சிவன் கோயிலை கொள்ளையடித்தார். மார்வார் பிரதேசத்திற்கு தெற்கே இருந்த வறண்ட தார் பாலைவனத்தின் வழியே அணி வகுத்ததற்குப் பிறகு கோரி இராணுவமானது சோர்வடைந்தது. அபு மலையை அடைந்தபோது அவர்கள் கதரரகட்டா என்ற மலைக் கணவாயில் சோலாங்கி ஆட்சியாளரான இரண்டாம் முலராஜாவால் தோற்கடிக்கப்பட்டனர். இரண்டாம் முலராஜாவுக்கு பிற இராசபுத்திர தலைவர்களான, குறிப்பாக, நடோலில் இருந்து முகம்மதுவால் முன்னர் தோற்கடிக்கப்பட்ட நாதுல்லாவின் சகாமனா ஆட்சியாளரான கேலெனதேவா, சோலாரின் சகாமனா ஆட்சியாளரான கீர்த்திபாலா மற்றும் அற்புத பரமார ஆட்சியாளரான தரவர்சன் ஆகியோரும் உதவினர்.[31] இந்த யுத்தத்தின் போதும், காசுனிக்கு பாலைவன வழியில் பின் வாங்கும் போதும் கோரி இராணுவமானது கடுமையான இழப்பை சந்தித்தது.[20] இதற்குப்பிறகு வடக்கு வழிகளை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு முகம்மது தள்ளப்பட்டார். வட இந்தியாவுக்குள்ளான மேற்கொண்ட ஊடுருவல்களுக்கு, பஞ்சாப் பகுதி மற்றும் வட மேற்கில் ஒரு ஏற்புடைய தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.[32]
1179இல் முகம்மது பெசாவரை கைப்பற்றினார். இது கசனவியர்களால் ஆட்சி செய்யப்பட்டு கொண்டிருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[33] பிறகு மேலும் முன்னேறிய இவர் 1181இல் லாகூரை முற்றுகையிட்டார். முகம்மதுவை லாகூரின் எல்லையை சுற்றியே மேலும் சில ஆண்டுகளுக்கு இருக்குமாறு குஷ்ரவ் மாலிக் செய்தார். இதை திறை செலுத்துவது, கசனவிய இளவரசர்களில் ஒருவரான மாலிக் ஷாவை முகம்மதுவின் கட்டுப்பாட்டில் காசுனியில் ஒரு பிணைக் கைதியாக வைத்திருக்க செய்தது ஆகியவற்றின் மூலம் செய்தார். 1182இல் முகம்மது ஒரு வளைவு போன்ற தெற்கு வழியை பின்பற்றினார். சிந்து மாகாணத்தின் அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுக நகரமான தெபாலுக்கு சென்றார். சூம்ராக்களை அடிபணிய வைத்தார்.[34] பின்வந்த ஆண்டுகளில் தற்போதைய பாக்கித்தானை சுற்றியிருந்த பகுதிகளில் தனது அரசை விரிவாக்கம் செய்தார். தனது வெற்றிகளை நிலைக்கச் செய்தார். சியால்கோட்டை தன்னுடைய அரசில் இணைத்துக்கொண்டார். லாகூர் மற்றும் அதை சுற்றி இருந்த கிராமப்புற பகுதிகளை சூறையாடினர்.[35][36] சியால்கோட்டில் இருந்த கோரிக் கோட்டை காவல் படையினரை வெளியேற்றுவதற்கு குஷ்ரவ் மாலிக் ஒரு தோல்வியடைந்த முயற்சியை செய்ததற்கு பிறகு லாகூர் மீது தனது இறுதித் தாக்குதலை முகம்மது மேற்கொண்டார். ஒரு சிறு முற்றுகைக்குப் பிறகு குஷ்ரவ் மாலிக் சரண் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார்.[37] கர்ச்சிஸ்தான் கோட்டையில் குஷ்ரவ் மாலிக்கை முகம்மது சிறை வைத்தார். குஷ்ரவ் மாலிக் பாதுகாப்பாக திரும்பிச்செல்ல ஆதரவளிப்பேன் என்ற தனது ஒப்பந்தத்தையே முகம்மது மீறினார். பிரோசுகோக்குவில் இருந்த கியாதல்தீன் முகம்மதுவிடம் குஷ்ரவ் மாலிக் அனுப்பப்பட்டார். 1192ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு குஷ்ரவ் மாலிக் மற்றும் அவரது அனைத்து உறவினர்களும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[35][38] இவ்வாறாக கசனவியர் அரச மரமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கோரிக்களுடனான கசனவியர்களின் வரலாற்று ரீதியான போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.[39]
கசனவிய அரசமரபை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு பிறகு கோரின் முகம்மது தற்போது தனது அதிகாரத்தை முக்கியமான சிந்து ஆற்று வடி நிலத்தின் மீது நிறுவினார். இதில் பெரும்பாலான பஞ்சாப் பகுதியும் அடங்கும்.[40][41] தன்னுடைய தந்தையின் அரசவையில் உயர் பதவி வகித்த காதியான முல்லா சிராஜூதீனை தான் புதிதாக வென்ற கசனவிய நிலப்பரப்புகள் மற்றும் முல்தானிற்கான நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் நியமித்தார். முல்லா சிராஜூதீனின் மகனாகிய மின்ஹஜ் அல்-சிராஜ் (பிறப்பு 1193) பிற்காலத்தில் 1260ஆம் ஆண்டு தபாகத்-இ நசீரி என்ற நூலை எழுதினார். கோரி அரசமரபு மற்றும் தில்லி சுல்தானகம் குறித்த நடுக் காலத்தைச் சேர்ந்த ஒரு நினைவுச் சின்ன நூலாக இது கருதப்படுகிறது.[42][35]
1190இல் சிந்து மாகாணம் மற்றும் மேற்கு பஞ்சாபில் தனது அதிகாரத்தை நிலைநாட்டிய பிறகு, கோரித் தளபதிகள் கிழக்கு பஞ்சாப் பகுதிக்குள் ஊடுருவல்களை நடத்த தொடங்கினர். பிருத்திவிராச் சௌகானின் இராச்சியத்தின் வடமேற்கு எல்லையில் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா கோட்டையை கைப்பற்றினர். 1,200 குதிரை வீரர்களுடன் அக்கோட்டையின் ஆளுநராக துலக்கின் காசி சியாவுதீனை நியமித்தார். கோட்டையை முற்றுகையிடுவதற்கு பிரிதிவிராஜின் இராணுவமானது அவருக்கு திறை செலுத்திய இளவரசரான கோவிந்த ராயின் தலைமையில் வருகிற செய்தி முகம்மதுவை வந்தடைந்தது. தற்போதைய அரியானாவின் தானேசரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தரைன் என்ற பட்டணத்துக்கு அருகில் இரு இராணுவங்களும் இறுதியாக சந்தித்தன. மம்லூக் அடிமை குதிரை வில்லாளர்கள் தங்களது தாக்குதலை தொடங்கினர். இதற்கு பதிலடியாக பிருத்திவிராச் மூன்று புறமும் இருந்து முகம்மதுவின் இராணுவத்தை தாக்கினார். இவ்வாறாக யுத்தத்தில் பிருத்திவிராச்சின் கை ஓங்கியிருந்தது. கோவிந்த ராயை தானே சண்டையிட்டு முகம்மது காயப்படுத்தினார்.[lower-alpha 1] இச்செயலில் முகம்மதுவும் காயமடைந்தார். பிறகு முகம்மதுவின் இராணுவம் பின்வாங்கியது. பிருத்திவிராச்சின் இராணுவம் வெற்றி பெற்றது.[44]
மின்ஹஜின் கூற்றுப்படி யுத்த களத்தில் இருந்து காயமடைந்த நிலையில் முகம்மது, கல்ஜி குதிரை வீரர்களால் கொண்டு செல்லப்பட்டார்.[45] இதில் இருந்து பெருமளவு மாறுபட்ட சைனுல் மசீர் என்பவரின் கூற்றுப்படி கோவிந்தராஜாவுடனான சண்டையில் காயமடைந்த முகம்மது சுய நினைவின்றி விழுந்தார். அவர் இறந்ததாக எண்ணிய அவரது படைகள் கலைந்து பின் வாங்கின. அவரது படை வீரர்களில் எஞ்சிய ஒரு குழுவினர் இரவில் யுத்த களத்திற்கு வந்தனர். முகம்மதுவின் உடலை தேடினர். காயமடைந்திருந்த முகம்மது தனது படை வீரர்களை அடையாளம் கண்டார். முகம்மதுவை உயிருடன் கண்ட படைவீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். யுத்தகளத்தில் இருந்து காசுனிக்கு அவரை தூக்கி சென்றனர்.[46] எனினும், சைனுல் மசீரின் இந்த விவரிப்பானது மற்ற எந்த ஒரு சமகால மற்றும் பிந்தைய வரலாற்றாளர்களால் கூறப்படவில்லை. எனவே இதன் நம்பகத் தன்மையானது கேள்விக்குரியதாக உள்ளது. மின்ஹஜின் விவரிப்பானது அதிக நம்பத்தன்மை உடையதாக கருதப்படுகிறது.[35]
தபரிந்தில் இருந்த சியாவுதீன் தலைமையிலான கோரிக் கோட்டை காவல் படையினர் 13 மாதங்களுக்கு தாக்குப் பிடித்தனர். பிறகு தோல்வியை ஒப்புக் கொண்டனர். தங்களிடம் முற்றுகை எந்திரங்கள் இல்லாத காரணத்தால் முற்றுகையின் போது உடனடி முன்னேற்றங்களை இராசபுத்திரர்களால் பெற இயலவில்லை. இதனால் இந்த மாதங்களின் போது முகம்மதுவின் நிலையானது வலிமைப்படுத்தப்பட்டது. இவர் ஒரு வலிமையான இராணுவத்தைச் சேர்த்தார்.[47]
தரைன் தோல்விக்கு பிறகு, யுத்தத்தின் போது தப்பித்து ஓடிய கோரிக்கள், கில்ஜிக்கள் மற்றும் ஆப்கானிய "அமீர்"களுக்கு கடுமையான தண்டனைகளை முகம்மது கொடுத்தார். அவர்களது கழுத்தைச் சுற்றி தானியங்கள் நிரப்பப்பட்ட பைகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் காசுனி முழுவதும் நடத்திச் செல்லப்பட்டனர். இதற்கு மறுத்தவர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டது.[48] பிந்தைய நடுக்கால வரலாற்றாளரான பெரிஷ்தா, காசுனியில் இருந்த கதைகளை அடிப்படையாக கொண்டு மேலும், தான் தோல்வி அடைந்த அவமானத்திற்கு பழி தீர்க்கும் வரை யுத்தத்தில் அடைந்த காயத்தை ஆற்ற மாட்டேன் என்று முகம்மது சபதம் எடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.[49] கோரி அரசமரபின் ஒரு முக்கியமான ஈரானிய தளபதியான உசைன் கர்மில் காசுனியிலிருந்து அழைக்கப்பட்டார். பிற அனுபவம் வாய்ந்த போர் பிரபுக்களான முகல்பா, கர்பக் மற்றும் இல்லா போன்றோரும் ஒரு பெரிய படையுடன் அழைக்கப்பட்டனர். [50]அக்காலகட்டத்தை ஒத்து வாழ்ந்த வரலாற்றாளரான மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி மற்றும் அப்துல் மாலிக் இசாமி ஆகியோர் 1192இல் யுத்தத்திற்கு முழுவதும் கவசங்களை உடைய 1.20 லட்சம் முதல் 1.30 லட்சம் வரையிலான வீரர்களை முகம்மது கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.[51] அதே நேரத்தில் பெரிஷ்தா, இந்த தீர்க்கமான யுத்தத்தில் இராசபுத்திர இராணுவத்தின் வலிமையாக 3,000 யானைகள், 3 லட்சம் குதிரைப்படை மற்றும் காலாட்படையை குறிப்பிடுகிறார். இது ஒரு அப்பட்டமான மிகைப்படுத்தலாக இருக்கும் என கருதப்படுகிறது.[52]
பிருத்திவிராச் சௌகான் தன்னுடைய பதாகைகளுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடைய பதாகைகள் (இவருக்கு கீழ் இருந்த இராசபுத்திரர்கள் அல்லது இவரது கூட்டாளிகள்) இன்னும் வராமல் இருந்த காரணத்தால் யுத்தத்தை தாமதப்படுத்த எண்ணினார். விடியும் முன்னரே கோரிக்கள் இராசபுத்திர இராணுவத்தை தாக்கினர். அணிவகுப்பை இராசபுத்திரர்கள் உருவாக்கிய போதும் சூரியன் உதிப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலால் இழப்புகளை சந்தித்தனர். இறுதியாக இராசபுத்திர இராணுவம் தோல்வி அடைந்தது. பிருத்திவிராச் சௌகான் கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வெற்றிக்குப் பிறகு கோரிக்கள் அஜ்மீரை சூறையாடினர். சிவலிக்கின் பெரும்பாலான சகாமனா நிலப்பரப்பை தங்களது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர். சிர்சா, அன்சி, சமனா மற்றும் கோகரம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ இடங்களை கைப்பற்றி அங்கு வலிமையான கோட்டை காவல் படையினரை கோரின் முகம்மது நிறுத்தினார்.[53] பிறகு கோரின் முகம்மது அதிகப்படியான திறையை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிருத்திவிராச் சௌகானின் மகனான சிறுவன் நான்காம் கோவிந்தராஜனை கைப்பாவை ஆட்சியாளராக பதவியில் அமர்த்தினார்.[54]
எனினும் இவரது உறவினர் அரி ராஜாவின் எதிர்ப்புக்கு பிறகு இரத்தம்பூருக்கு இடம் மாறும் நிலைக்கு கோவிந்தராஜா தள்ளப்பட்டார். அங்கு சகாமனாக்களின் ஒரு புதிய அரச மரபை இவர் நிறுவினார். அஜ்மீரில் இருந்த கோரி கோட்டை காவல் படையினரை குறுகிய காலத்திற்கு அரி ராஜா வெளியேற்றினார். எனினும் பிறகு குத்புதீன் ஐபக்கால் தோற்கடிக்கப்பட்டார். இறுதியாக அரி ராஜா தீயில் ஏறி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். அஜ்மீரை கோரிக்கள் மீண்டும் ஆக்கிரமித்தனர். ஒரு முஸ்லிம் ஆளுநரின் கீழ் அதை கொண்டு வந்தனர்.[55] சீக்கிரமே 1192இல் தில்லியையும் கோரின் முகம்மதுவும் குத்புதீன் ஐபக்கும் கைப்பற்றினர்.[56] அஜ்மீரில் முன்னர் பின்பற்றப்பட்ட கொள்கையின் தொடர்ச்சியாக ஒரு கைப்பாவை ஆட்சியாளர் திறை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தில்லியின் அரியணையில் அமர வைக்கப்பட்டார். இரண்டாம் தரைன் யுத்தத்தில் இறந்த கோவிந்தராஜனின் மகனாக இவர் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் துரோகம் செய்ததாக கூறி இவரும் சீக்கிரமே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[57][58]
வட இந்திய சமவெளியில் கோரின் முகம்மது தன்னுடைய ஊடுருவல்களை தொடர்ந்த அதே நேரத்தில் இவரது அண்ணன் கியாதல்தீனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் குவாரசமிய பேரரசுக்கு எதிரான திரான்சாக்சியானாவில் ஏற்பட்ட சண்டைகளில் கோரிக்களின் நிலப்பரப்பு விரிவாக்கத்தில் கோரின் முகம்மது ஈடுபட்டிருந்தார். எனினும் பக்கிரி முதபிர் மற்றும் ஜுஸ்ஜனியின் குறிப்புகளின் படி இரண்டாம் தரைன் யுத்தத்திற்கு பிறகு வட இந்தியாவில் இருந்த கோரி நிலப்பரப்புகளுக்கு நிர்வாகியாக குத்புதீன் ஐபக்கை இவர் நியமித்தார்.[59][60][61] இவர் அரசியல் கொலை செய்யப்படுவதற்கு இவரது தளபதிகளான குத்புதீன் ஐபக், பகாவுதீன் துக்ரில், பக்தியார் கல்சி மற்றும் தாஜல்தீன் இல்திஸ் ஆகியோர் உள்ளூர் இராச்சியங்கள் மீது ஊடுருவல்கள் நடத்தியதன் மூலம் இந்திய துணை கண்டத்தில் இவரது பேரரசை கிழக்கே வங்காளத்தின் வடமேற்கு பகுதிகள் முதல், வடக்கே அஜ்மீர் மற்றும் இரத்தம்பூரில் இருந்து தெற்கே உஜ்ஜைன் வரை விரிவாக்கம் செய்தனர்.[62]
தில்லி மற்றும் அதை சுற்றியிருந்த பகுதிகளில் கோரி ஆட்சியை ஐபக் நிலை நிறுத்தியதற்கு பிறகு, கீழே கங்கை சமவெளியை நோக்கி மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்காக முகம்மது தானே இந்தியாவிற்கு திரும்பி வந்தார். இவ்வாறாக, 1194இல் 50,000 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்துடன் யமுனை ஆற்றை இவர் கடந்தார். அங்கு சந்தவார் போரில் இராசபுத்திர ககதவால மன்னரான செயச்சந்திரனின் படைகளை எதிர்கொண்டார். கோரி இராணுவமானது வெற்றியடைந்தது. யுத்தத்தில் செயச்சந்திரன் கொல்லப்பட்டார். செயச்சந்திரனின் பெரும்பாலான இராணுவம் படுகொலை செய்யப்பட்டது. போரைத் தொடர்ந்து அசினியில் இருந்த கோட்டையை கோரிக்கள் கைப்பற்றினார். ககதவாலர்களின் அரசு கருவூலத்தை அங்கு இவர்கள் சூறையாடினர். பிறகு புனித நகரமான வாரணாசிக்கு தொடர்ந்து முன்னேறினர். வாரணாசியானது சூறையாடப்பட்டது. அதன் ஏராளமான எண்ணிக்கையிலான கோயில்கள் அழிக்கப்பட்டன.[63] ககதவால தலைநகரான கன்னோசி 1198இல் இணைத்துக்கொள்ளப்பட்டது.[57][64][65] இந்த படையெடுப்பின்போது புத்த நகரமான சாரநாத்தும் சூறையாடப்பட்டது.[65][66]
தற்கால இராசத்தானை சுற்றியிருந்த தன்னுடைய பகுதிகளை நிலை நாட்டுவதற்காக 1196 வாக்கில் முகம்மது மீண்டும் இந்திய போர் முனைக்கு திரும்பி வந்தார். சதௌன் இராசபுத்திரர்களின் ஒரு பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் பயானா நிலப்பரப்பானது அந்நேரத்தில் இருந்தது. முகம்மது ஐபக்குடன் இணைந்து முன்னேறி தங்கர் என்ற இடத்தை முற்றுகையிட்டார். தங்கரின் ஆட்சியாளரான குமாரபாலன் தோற்கடிக்கப்பட்டார். தன்னுடைய மூத்த அடிமை பகாவுதீன் துக்ரிலுக்கு கீழ் இந்த கோட்டையை முகம்மது கொடுத்தார். பகாவுதீன் துக்ரில் பின்னர் சுல்தான்கோட் என்ற பகுதியை நிறுவி அதை தன்னுடைய வலுவூட்டல் பகுதியாக பயன்படுத்தினார்.[67][68] தங்கர் வெல்லப்பட்டதற்குப் பிறகு பகாவுதீன் துக்ரில் குவாலியர் கோட்டையை கைப்பற்றினார். குவாலியரின் பரிகர் தலைவரான சல்லகணபாலன் ஒரு நீண்ட முற்றுகைக்குப் பிறகு சரணடைந்தார். கோரி அரசமரபின் முதன்மை நிலையை ஒப்புக் கொண்டார்.[69] முகம்மது அரசியல் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு பயானாவின் சுல்தானாக தன்னைத் தானே துக்ரில் அறிவித்துக்கொண்டார்.[70]
1197இல் குத்புத்தீன் ஐபக் குசராத்து மீது படையெடுத்தார். ஒரு திடீர் தாக்குதலுக்கு பிறகு சிரோகியில் இரண்டாம் பீமனைத் தோற்கடித்தார். பிறகு பீமனின் தலைநகரான அன்கில்வாராவை சூறையாடினர். இவ்வாறாக 1178இல் இதே இடத்தில் கசரதா யுத்தத்தில் கோரின் முகம்மது தோற்கடிக்கப்பட்டதற்கு ஐபக் பழி வாங்கினார் என்று குறிப்பிடப்படுகிறது.[71]
தன்னுடைய கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு இடையேயான காலங்களில், தன்னுடைய அண்ணனின் குவாரசமியர்களுக்கு எதிரான மேற்கு நோக்கிய விரிவாக்கத்திற்காக கோரின் முகம்மது தொடர்ந்து உதவி புரிந்தார். அதே நேரத்தில் குராசான் நிகழ்வுகளில், காரா கிதை துருப்புகளுடன் கூட்டணி வைத்த அலாவல்தீன் தெகீசால் அவரது தம்பி சுல்தான் ஷா தோற்கடிக்கப்பட்டார். அலாவல்தீன் தெகீசு திசம்பர் 1172இல் குவாரசமிய அரியணைக்கு வந்தார். சுல்தான் ஷா கோரி சகோதரர்களிடம் வந்தார். தன்னுடைய அண்ணன் தெகீசை பதவியில் இருந்து நீக்குவதற்காக இவர்களுடைய உதவியை வேண்டினார். சுல்தான் ஷாவை இவர்கள் நல்ல முறையில் வரவேற்ற போதும், தெகீசிற்கு எதிராக இராணுவ உதவி அளிக்க இவர்கள் மறுத்து விட்டனர். ஏனெனில், அந்நேரம் வரை தெகீசுடன் நல்ல உறவு முறையில் கோரி சகோதரர்கள் இருந்தனர்.[72] குராசானில் தன்னுடைய சுதந்திர வேள் பகுதியை சுல்தான் ஷா அமைத்துக்கொண்டார். கோர் பகுதிகளை ஆளுநர் பகாவுதீன் துக்ரிலுடன் இணைந்து சுல்தான் ஷா சூறையாடத் தொடங்கினார். இவ்வாறாக முகம்மதுவின் உதவியை கியாதல்தீன் வேண்டினார். அந்நேரத்தில் இந்திய படையெடுப்புகளில் முகம்மது மூழ்கியிருந்தார். காசுனியில் இருந்து தனது இராணுவத்துடன் அணி வகுத்து வந்தார். கோரிக்களுக்கு துணையாக பாமியானின் சம்சுதீன் முகம்மது மற்றும் ஹெறாத்தின் தாசுதீன் ஆகியோர் முறையே தங்களது படைகளுடன் குவாரசமியர்களுக்கு எதிராக கோரிக்களுடன் இணைந்தனர்.[73]
மாதக் கணக்கிலான இராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு முர்கபு ஆற்றின் கரையில் சுல்தான் ஷாவை கோரி படைகள் தீர்க்கமாக தோற்கடித்தன. சுல்தான் ஷா மெர்வ் நகரத்திற்கு தப்பி ஓடினார். ஹெறாத்தின் ஆளுநரான பகாவுதீன் துக்ரில் கோரிக்களால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[74] தங்களுடைய வெற்றியைத் தொடர்ந்த கோரிக்கள் ஹெறாத்தை மீண்டும் கைப்பற்றினர்.[75] ஓர் ஆண்டு கழித்து 1191இல் சுல்தான் ஷா இறந்தார். இதற்கு போதைப் பொருள் அதிகமாக எடுத்துக்கொண்டதும் ஒரு வேளை காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.[74] வரலாற்றாளர் அபிபுல்லாவின் கூற்றுப்படி, ஹெறாத்தை தாண்டி வெளியே குராசான் பகுதியில் இருந்த எந்த ஒரு நிலப்பரப்பையும் கோரிக்களால் இணைத்து கொள்ள இயலவில்லை. ஏனெனில், அப்பகுதிகள் தொடர்ந்து தெகீசின் செல்வாக்கின் கீழ் இருந்தன.[75] 1193 வாக்கில் தெகீசு பெரும்பாலான ஈரானுடன் சேர்த்து தெற்கு காசுப்பியன் பட்டைப் பகுதியையும் கைப்பற்றினார்.[76] அபிபுல்லாவிற்கு மாறாக வரலாற்றாளர் போஸ்வர்த் கோரிக்கள் மெர்வில் தங்களது வெற்றிக்கு பிறகு குராசானின் சில பகுதிகளை இணைத்து கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.[13]
தெகீசு 1200இல் இறந்தார். குவாரசமியாவின் அலாவுதீன் ஷா மற்றும் அவரது உறவினர் இந்து கான் ஆகியோருக்கு இடையே ஒரு குறுகிய கால வாரிசுரிமைச் சண்டைக்கு இது இட்டுச் சென்றது. இந்த சந்தர்ப்பத்தை கோரி சகோதரர்கள் பயன்படுத்திக் கொண்டனர். குவாரசமிய குடும்பத்தில் வாரிசுரிமைச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் முகம்மதுவும், கியாதல்தீனும் படையெடுத்தனர். பாலைவனச்சோலை நகரங்களான நிசாபூர், மெர்வ் மற்றும் துஸ் ஆகிய நகரங்களை கைப்பற்றினர். கோர்கன் வரை முன்னேறினர். இவ்வாறாக தங்களது வரலாற்றில் முதல் முறையாக கோரிக்கள் ஒரு குறுகிய காலத்திற்கு பெரும்பாலான குராசான் முழுவதும் தங்களது செல்வாக்கை நிறுவினர்.[77][78] எனினும், இவர்களது வெற்றியானது ஒரு குறுகிய கால நிகழ்வாக மாறியது. ஆகத்து 1200இல்[79] அலாவுதீன் அரியணைக்கு வந்தார். 1201ஆம் ஆண்டு வாக்கில் தான் இழந்த பகுதிகளை சீக்கிரமே மீண்டும் கைப்பற்றினார்.[80] கோரிக்களுக்கு எதிரான வெற்றியைப் பெற்ற போதிலும் முகம்மதுவிடம் தூதரக உறவுகளுக்காக தூதுவனை அலாவுதீன் அனுப்பினார். காரா கிதை நாட்டவரின் முதன்மை நிலையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர் இதை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோரிக்களுடன் அமைதி ஏற்படுத்த அவர் வேண்டினார். எனினும், இந்த முயற்சியானது வீணான ஒன்றாக இருந்தது. முகம்மது நிசாபூர் நோக்கி தனது படைகளுடன் அணி வகுத்தார். இதன் காரணமாக நகரின் சுவர்களுக்குள் தன்னைத் தானே அடைத்துக் கொண்டு இருக்கும் நிலை அலாவுதீனுக்கு நிகழ்ந்தது. துஸ் நகரத்துடன் ஹெறாத்தையும் முகம்மது மீண்டும் கைப்பற்றினார். கிராமப்புற பகுதிகளை சூறையாடினார்.[81]
13 மார்ச் 1203[82] அன்று ஹெறாத்தில் இதே நேரம் வாக்கில் மாதக் கணக்கிலான உடல் நலக்குறைவிற்கு பிறகு கியாதல்தீன் முகம்மது இறந்தார். ஏற்கனவே இருந்த அரசு விவகாரங்களில் இருந்து முகம்மதுவின் கவனத்தை இந்த இறப்பு குறுகிய காலத்திற்கு மாற்றியது. ஹெறாத்தில் தன்னுடைய உறவினர் அல்பு காசியை முகம்மது நியமித்திருந்தார். ஹெறாத்தில் முகம்மது இல்லாத நிலையை இவ்வாறாக பயன்படுத்திய குவாரசமிய படைகள் மெர்வ் நகரத்தை கைப்பற்றின.[83] அங்கு இருந்த கோரி ஆளுநரான கரங்கை சிரச்சேதம் செய்தனர். கோரின் முகம்மது ஒட்டு மொத்த குவாரசமிய பேரரசையும் ஒரு வேளை கைப்பற்றும் நடவடிக்கையாக ஹெறாத்துக்கு பதிலாக குவாரசமியாவின் தலைநகரான கொன்யா-ஊர்கெஞ்ச் மீது முற்றுகை நடத்தினார். கியாதல்தீனின் இறப்பிற்கு பிறகு குவாரசமியர்கள் ஹெறாத் மீது முன்னர் முற்றுகை நடத்தியிருந்தனர். கோரிக்கள் முன்னேறிய போது அலாவுதீன் பின்வாங்கினார். காரா கிதையிடம் உதவி வேண்டினார். குவாரசமியர்களுக்கு உதவுவதற்காக காரா கிதை ஒரு குறிப்பிடத்தக்க அளவிலான இராணுவத்தை அனுப்பியது. காரா கிதை படைகள் இடையே இருந்து வந்த அழுத்தம் காரணமாக முகம்மது முற்றுகையை கைவிட்டு விட்டு பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருந்தும், பிரூசுகுக்குவுக்கு முகம்மது செல்லும் வழியில் துரத்தப்பட்டார். 1204ஆம் ஆண்டு காரா கிதை, தயங்கு தலைமையிலான காரா கானிய கானரசு மற்றும் உதுமான் இப்னு இப்ராகிம் ஆகியோரின் ஒன்றிணைந்த படைகளால் அந்த்குத் யுத்தத்தில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டார்.[84] காரா கிதை தளபதியான தயங்குவிற்கு ஒரு பெருமளவிலான பிணையத் தொகையை செலுத்தியதற்குப் பிறகு தன்னுடைய தலை நகருக்கு திரும்பிச் செல்ல முகம்மதுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்பிணையத் தொகையில் பல யானைகள் மற்றும் தங்க நாணயங்களும் அடங்கியிருந்தன.[85] ஜுஸ்ஜனியின் கூற்றுப்படி முகம்மது மற்றும் தயங்குக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் சமர்கந்தின் உதுமான் இப்னு இப்ராகிமால் ஏற்பாடு செய்யப்பட்டன. நம்பிக்கையற்றோரால் "இசுலாமின் சுல்தான்" கைது செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை என்ற காரணத்தால் அவர் ஏற்பாடு செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[86] இந்த தோல்வியைத் தொடர்ந்து ஹெறாத் மற்றும் பல்கு ஆகிய நகரங்களைத் தவிர பெரும்பாலான குராசான் மீதான தங்களது கட்டுப்பாட்டைக் கோரி அரசமரபானது இழந்தது.[87] இவ்வாறாக, முகம்மது குவாரசமியர்களுடன் அமைதிக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.[88]
அந்த்குத் அழிவிற்கு பிறகு மற்றும் அந்த யுத்தத்தில் முகம்மதுவின் இறப்பு குறித்து பின் வந்த வதந்திகள் ஆகியவை கோரி சுல்தானகம் முழுவதும் பரவலான கிளர்ச்சிகளுக்கு வழி வகுத்தன. குறிப்பாக ஐபக் பெக், உசைன் கர்மில் மற்றும் காசுனியின் ஆளுநரான இல்திசு ஆகியோர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.[lower-alpha 2][89] காசுனிக்கு பதிலாக முதலில் முல்தானை நோக்கி முகம்மது அணி வகுத்தார். அங்கு இவரது அடிமை தளபதியான ஐபக் பெக் அங்கிருந்த கோரி ஆளுநரான அமீர் தத் அசனை ஒரு தனிப்பட்ட சந்திப்பின்போது அரசியல் கொலை செய்திருந்தார். முல்தானின் புதிய ஆளுநராக தன்னை முகம்மது நியமித்ததாக ஒரு போலி ஆணையை வெளியிட்டிருந்தார். இந்த ஐபக் பெக் அந்த்குத் யுத்தத்தில் முகம்மதுவை காப்பாற்றியிருந்தார். ஐபக் பெக்கை தீர்க்கமாக முகம்மது தோற்கடித்தார். யுத்தத்தில் அவரை கைது செய்தார். இதற்கு பிறகு காசுனியை நோக்கி இவர் அணி வகுத்தார். அங்கு இதற்கு முன்னர் இல்திசு கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தார். நகரத்தைக் கைப்பற்றி இருந்தார்.[90] கோரின் முகம்மதுவின் ஒரு பரந்த இராணுவத்தின் முன்னேற்றத்தின் போது தவிர்க்க முடியாத தோல்வியை எதிர்நோக்கி இருந்த இல்திசு அவரது உயர்குடியினருடன் முகம்மதுவிடம் சரணடைந்தார். முகம்மது இல்திசுவை மன்னித்தார்.[91]
இவ்வாறாக முகம்மது வெற்றிகரமாக தன்னுடைய பேரரசின் நிலைத் தன்மையை மீண்டும் நிறுவினார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்கியதற்குப் பிறகு தன்னுடைய கவனத்தை மீண்டும் நடு ஆசியா பக்கம் திருப்பினார். அந்த்குத் யுத்தத்தில் தான் தோற்கடிக்கப்பட்டதற்கு பழி வாங்கவும், குராசானில் தன்னுடைய பகுதிகளை மீண்டும் பெறவும் விரும்பினார். இவ்வாறாக சூலை 1205இல் பல்குவில் முகம்மதுவின் ஆளுநர் தற்போதைய உசுபெக்கிசுத்தானின் டெர்மெஸை முற்றுகையிட்டார். ஒரு குறுகிய கால முற்றுகைக்கு பிறகு அந்த நகரத்தைக் கைப்பற்றினார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரா கிதை கோட்டை காவல் படையினரை அழித்தார். இக்கோட்டையை தன்னுடைய மகனின் ஆளுமையின் கீழ் கொடுத்தார்.[92] இதற்கு பிறகு, திரான்சாக்சியானாவில் தன்னுடைய இராணுவத்தை அணி வகுத்துச் செல்ல உதவுவதற்காக, பாமியானில் தன்னுடைய பதிலரையராக இருந்த இரண்டாம் பகாவல்தீன் ஷாவுக்கு படகுகளை கொண்ட ஒரு பாலத்தைக் கட்டுமாறும், ஆமூ தாரியா ஆற்றின் வழியாக ஒரு கோட்டையை கட்டுமாறும் ஆணையிட்டார்.[91][93] காரா கிதைக்கு எதிரான போர் பயணத்தில் தன்னுடன் இணையுமாறு தன் இந்திய வீரர்களுக்கும் முகம்மது ஆணையிட்டார்.[94] எனினும், இதற்கு பிறகு சீக்கிரமே அரசியல் குழப்பமானது ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் பகுதியை நோக்கி முகம்மது தன்னுடைய கவனத்தை திருப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாப் பகுதியில் இறுதியாக முகம்மது அரசியல் கொலை செய்யப்பட்டார்.[95]
கீழ் சிந்து ஆறு முதல் சிவாலிக் குன்றுகள் வரை தங்களுடைய செல்வாக்கை விரிவடையச் செய்திருந்த கோகர் பழங்குடியினர் அந்த்குத் யுத்தத்தில் முகம்மது தோற்கடிக்கப்பட்ட நிகழ்வுக்கு பிறகு எழுச்சியடைந்தனர். லாகூர் மற்றும் காசுனிக்கு இடையிலான கோரி தொடர்பு சங்கிலியை கிளர்ச்சியில் ஈடுபட்டு தடை செய்தனர். லாகூரையும் சூறையாடினர்.[90]
இவ்வாறாக திசம்பர் 1205 காசுனியில் இருந்து முகம்மது அணி வகுத்தார். கோகர்களை அடிபணிய வைப்பதற்காக தன்னுடைய கடைசிப் படையெடுப்பை நடத்தினார். பகன் மற்றும் சர்கா தலைமையிலான கோகர்கள் செனாப் மற்றும் ஜீலம் ஆறுகளுக்கு இடையில் ஓர் இடத்தில் யுத்தத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் வரை வல்லமையுடன் போரிட்டனர். சம்சுத்தீன் இல்த்துத்மிசு ஒரு சேமக் கையிருப்புப் பிரிவுடன் வந்ததற்குப் பிறகு அந்த நாளை முகம்மது போரிட்டு முடித்தார். இல்த்துத்மிசை ஜீலம் ஆற்றின் கரைகளில் முன்னர் முகம்மது நிறுத்தியிருந்தார். தன்னுடைய வெற்றிக்கு பிறகு கோகர்களை ஒரு பெரும் அளவிலான படு கொலைக்கு முகம்மது உட்படுத்தினார். தப்பித்து ஓடிய போது கோகர்கள் பதுங்கிய காடுகளையும் முகம்மதுவின் இராணுவங்கள் எரித்தன.[96][97]
கோகர்களுக்கு எதிராக சம்சுத்தீன் இல்த்துத்மிசின் செயல்பாட்டுக்காக அவருக்கு மரியாதைக்குரிய ஒரு சிறப்பு அங்கியை முகம்மது கொடுத்தார். ஜூஸ்ஜனியின் கூற்றுப்படி, முகம்மது இல்த்துத்மிசிற்கு அடிமை முறையிலிருந்து விடுதலையும் கொடுத்தார். இல்த்துத்மிசை உண்மையில் விலைக்கு வாங்கிய எசமானரான ஐபக்கும், முகம்மதுவின் பிற மூத்த அடிமைகள் அடிமைகளாகவும் தொடர்ந்து அந்நேரம் வரை விடுதலை செய்யப்படாத நிலையிலும் இல்த்துத்மிசு விடுதலை செய்யப்பட்டார்.[98]
கோகர்களை தோற்கடித்த பிறகு தனது தலை நகரம் காசுனிக்கு திரும்பும் வழியில் முகம்மதுவின் கவிகை வண்டியானது சோகவாவுக்கு அருகில் தாமியக் என்ற இடத்தில் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. தற்போதைய பாகித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் நகருக்கு அருகில் இந்த சோகவா உள்ளது. அங்கு இவர் மார்ச் 15, 1206இல் இசுமாயிலி பிரிவினரால் அரசியல் கொலை செய்யப்பட்டார்.[100]
முகம்மதுவை அரசியல் கொலை செய்தவர்களின் அடையாளம் குறித்த சில மேலோட்டமான தகவல்கள் இந்த அரசியல் கொலை செய்தவர்கள் இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிடுகின்றன. எனினும், திரான்சாக்சியானாவில் கோரிக்களின் குறிக்கோள்களை குவாரசமியர்கள் ஏற்கனவே தோற்கடித்திருந்தனர். அந்த்குத் தோல்விக்கு பிறகு முகம்மதுவிடமிருந்து குவாரசமியர்கள் எந்த வித அச்சுறுத்தலையும் எதிர் நோக்கி இருக்கவில்லை. எனவே, வரலாற்றாளர் முகமது அபீப் குவாரசமியர்களால் இந்த இசுமாயிலி பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது உண்மையில்லை என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். முகம்மதுவின் குராசான் போர் பயணத்தின்போது அலமுத் கோட்டையை இவர் சூறையாடியிருந்தார். அலமுத்தின் இமாம் அலாவுதீனால் ஒரு வேளை இவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.[101]
பெரிஷ்தாவின் நூலை ஒரு வேளை ஆதாரமாகக் கொண்ட சில பிந்தைய நூல்கள் இந்த அரசியல் கொலை செய்தவர்கள் கோகர்கள் என்று குறிப்பிடுகின்றன. "தரிக்-இ-பிரிஷ்தா" நூலில் பெரிஷ்தா குறிப்பிடுவதாவது, முன்னர் முகம்மதுவால் தோற்கடிக்கப்பட்டிருந்த "20 கோகர்கள்" இவரது கவிகை வேண்டியை தாக்கினர், "கத்தியால்" இவரை குத்தினர் என்று குறிப்பிடுகிறார். எனினும், இந்த தகவல்கள் பிந்தைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி, அசன் நிசாமி, சம்சத்தீன் அத்-தகாபி போன்ற அனைத்து சம கால அல்லது சம காலத்தை ஒத்த வரலாற்றாளர்களும் முகம்மது திரிபுக் கொள்கையுடையவர்களால் அரசியல் கொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடுகின்றன. கோகர்களால் இவர் அரசியல் கொலை செய்யப்பட்டார் என்ற கதையானது ஒரு வேளை மறைமுகமான சான்றுகளை அடிப்படையாக கொண்டு பிந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[102] முகம்மதுவின் சவப்பெட்டியானது தமியக்கில் இருந்து காசுனிக்கு இவரது உயரதிகாரி மொயிதுல் முல்க் மற்றும் பிற உயரதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இவரது மகளின் கல்லறைக்கு அருகில் காசுனியில் இவர் புதைக்கப்பட்டார்.[91][103]
அந்த்குத் தோல்வி மற்றும் தொடர்ச்சியாக மேற்குப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டது ஆகிய நிகழ்வுகளுக்கு உள்ளான போதும் முகம்மதுவின் பேரரசானது இவர் அரசியல் கொலை செய்யப்பட்ட அன்று மேற்கே ஹெறாத், தெற்கே ஜமீன்தவர் பள்ளத்தாக்கு முதல் வட கிழக்கே இயாசின் பள்ளத்தாக்கு வரை பரந்து விரிந்திருந்தது.[104]
முகம்மதுவின் ஒரே குழந்தை இவரது மகள் ஆவார். இவரது வாழ்நாளின் போதே அம்மகள் இறந்து விட்டார்.[105] தாமியக்கில் இவர் திடீரென அரசியல் கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இவரது அடிமைகள் மற்றும் பிற மூத்த கோரி குடும்ப உயர்குடியினரிடையே இவருக்கு பின் யார் ஆள்வது என்ற ஒரு குறிப்பிடத்தக்க கால போராட்டத்துக்கு வழி வகுத்தது. காசுனி மற்றும் பிரூசுகுக்கில் இருந்த கோரி உயர் குடியினர் பாமியான் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் பகாவல்தீன் சாம் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்தனர். எனினும், இவரது துருக்கிய அடிமைகள் இவரது அண்ணன் கியாதல்தீனின் மகன் கியாதல்தீன் மகுமூதுவுக்கு ஆதரவளித்தனர்.[106] இருந்த போதிலும், காசுனியை நோக்கி அணி வகுத்து வந்த போது பகாவல்தீன் 24 பெப்ரவரி 1206 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.[107][87]
இவ்வாறாக கோரின் முகம்மதுவிற்கு பிறகு கியாதல்தீன் மகுமூது 1206இல் ஆட்சிக்கு வந்தார். கங்கை சமவெளியில் இவரது படையெடுப்புகளில் பெரும்பாலானவை இவருக்கு அடுத்த நிலையில் இருந்த குத்புத்தீன் ஐபக், தாஜல்தீன் இல்திசு, பகாவுதீன் துக்ரில், நசீரத்தீன் கபாச்சா மற்றும் பக்தியார் கில்ஜி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. தங்களது விவகாரங்களில் இவர்கள் கியாதல்தீன் மகுமூதுவை அரிதாகவே ஆலோசித்தனர். இருந்த போதிலும் இவர்கள் அனைவரும் மகுமூதுவுக்கு ஒரு குறைந்த அளவிலான திறையை தொடர்ந்து செலுத்தி வந்தனர்.[108] தன்னுடைய ஆட்சியின் போது ஐபக் மற்றும் இல்திசுவிற்கு அதிகாரப்பூர்வமாக அடிமை முறையிலிருந்து மகுமூது விடுதலை அளித்தார்.[109][110] இவ்வாறாக அடிமை முறையிலிருந்து விடுதலை பெற்றது மற்றும் மகுமூதுவிடம் இருந்து ஒரு மூலதனத்தைப் பெற்றது ஆகியவற்றுக்குப் பிறகு 1206இல் காசுனியின் மன்னனாக இல்திசு தன்னை நிறுவிக் கொண்டார்.[110] 1208இல் விடுதலையை அறிவித்த ஐபக் லாகூரில் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். எனினும், வரலாற்றாளர் இக்திதர் ஆலம் கான் ஐபக் தன்னைத் தானே "சுல்தானாக" அறிவித்துக் கொண்டார் என்பதை சந்தேகிக்கிறார். ஏனெனில், நாணயச் சான்றுகளில் இதற்கான ஆதாரம் காணப்படுவதில்லை.[111] சீக்கிரமே குவாரசமியாவின் அலாவுதீன் ஷாவின் முதன்மை நிலையை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மகுமூது தள்ளப்பட்டார். இது நாணயச் சான்றுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த நாணயங்களில் தன்னுடைய பெயருடன் அலாவுதீனின் பெயரையும் மகுமூது அச்சிட்டார். 1212இல் தான் அரசியல் கொலை செய்யப்படும் வரை "குத்பாவையும்" அலாவுதீனின் பெயரில் அறிவிக்க மகுமூது ஏற்பாடு செய்தார்.[112]
இதற்கு பிறகு குவாரசமியர்கள் தங்களது கைப்பாவை அரசாங்கத்தை கோரி நிலங்களில் நிறுவினர். எனினும், 1213இல் இல்திசு குவாரசமியர்களை கோரி நிலங்களில் இருந்து வெளியேற்றினார்.[113] அலாவுதீன் பிறகு கோரி குடும்பத்தினரை ஒழித்தார். 1215இல் சியாவல்தீன் அலியிடம் இருந்து பிரூசுகுக்கை அலாவுதீன் இணைத்துக் கொண்டார்.[114] சியாவல்தீன் அலி அலாவுதீன் கைதியாக ஈரானில் எரிக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும் அல்லது நாடு கடந்து தில்லிக்கு வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[107] கடைசி கோரி ஆட்சியாளரான பாமியான் பிரிவைச் சேர்ந்த சலாலல்தீன் அலியையும் அதே ஆண்டு அலாவுதீன் தோற்கடித்து மரண தண்டனைக்கு உட்படுத்தினார். இவ்வாறாக சன்சபானி குடும்பமானது 1215ஆம் ஆண்டில் முழுவதுமாக அழிந்து போனது.[115][87] காசுனியில் இருந்து இதே நேரத்தில் இல்திசு பதவியில் இருந்து இறக்கப்பட்டார். கோரின் முகம்மது வென்ற பகுதிகளில் தனக்கும் பங்கு கேட்பதற்காக பின்னர் தில்லிக்கு இல்திசு தப்பித்து வந்தார். எனினும், தரைன் யுத்தத்தில் இல்த்துத்மிசால் 1216இல் இவர் தோற்கடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[116]
ஜுஸ்ஜனியின் தபாகத்-இ நசீரி (அண்ணளவாக 1260) நூலின் படி முகம்மது தன்னுடைய வாழ்நாளின் போது ஏராளமான அடிமைகளை ஆர்வத்துடன் வாங்கினார். ஜுஸ்ஜனியின் கூற்றுப் படி இவர்கள் "கிழக்கில்" தங்களது திறமைகளுக்காக புகழ் பெற்றனர். அடிமை முறைக்கு உட்படுத்தப்பட்ட இளம் கபாச்சாவை முகம்மது வாங்கினார். கோரி சுல்தானால் கெர்மான் மற்றும் சஞ்சர் நிலப்பரப்புகளில் வரி வசூலிக்கும் பதவி கபாச்சாவிற்கு வழங்கப்பட்டது. இவர் தன்னுடைய அடிமைகளை விருப்பத்துடன் வளர்த்தார். அவர்களை தன்னுடைய மகன்கள் மற்றும் பிந்தைய ஆட்சியாளர்களாக நடத்தினார். தன்னுடைய பிந்தைய வாழ்நாட்களில் தன்னுடைய சொந்த கோரி குடும்பத்தின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாக இவ்வாறாக நடத்தினார் என்று குறிப்பிடப்படுகிறது.[117] குத்புத்தீன் ஐபக்கின் புரவலத் தன்மையின் கீழ் எழுதிய பக்ரி முதாப்பீரின் மற்றொரு சம கால நூலானது முகம்மதுவின் ஒவ்வொரு துருக்கிய அடிமைகளின் முக்கியத்துவத்திற்கும் முகம்மதுவை காரணமாகக் குறிப்பிடுகிறது. தன்னுடைய எசமானரின் நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றியதற்காக ஐபக்கை முதாப்பீர் புகழ்கிறார்.[118] கங்கை-யமுனை சமவெளியில் கோரி படையெடுப்புகளின் விரிவாக்கம் மற்றும் நிலை நிறுத்துதலில் ஒரு முக்கியமான பங்கை முகம்மதுவின் அடிமைகள் ஆற்றினர். அந்நேரத்தில் குராசானின் விவகாரங்களில் முகம்மது மூழ்கியிருந்தார். வட இந்தியாவில் இந்த அடிமைகளின் சொந்த அதிகாரத்தையும் இது அதிகரித்தது. அதே நேரத்தில் இவர்கள் கோரி முகம்மதுவை தங்களது உச்சபட்ச எசமானராக அவர் அரசியல் கொலை செய்யப்படும் வரை கருதினர்.[119]
அகமண பழக்க வழக்கப் படி தன்னுடைய அடிமைகளின் குடும்பங்களுக்கு நடுவே திருமண கூட்டணிகளையும் முகம்மது ஏற்படுத்தினார். இந்த கூட்டணிகளில் முக்கியமானவை தாஜல்தீன் இல்திசின் மகள்கள் குத்புத்தீன் ஐபக் மற்றும் நசீரத்தீன் கபாச்சாவிற்கு மணம் செய்விக்கப்பட்டது ஆகியவை ஆகும். மேலும், ஐபக்கின் இரண்டு மகள்கள் கபாச்சாவுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர்.[120] இக்கொள்கையானது ஐபக்காலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. ஐபக் தன்னுடைய மகளை தன் அடிமை இல்த்துத்மிசிற்கு மணம் முடித்து வைத்தார்.[121]
கோரின் முகம்மது மற்றும் இவரது அண்ணன் கியாதல்தீன் முகம்மதுவின் இரட்டை ஆட்சியின் போது கிழக்கு இசுலாமிய உலகத்தில் முக்கியமான சக்திகளில் ஒன்றாக கோரிக்கள் வளர்ந்தனர்.[122] கோரிக்கள் தங்களது நிலப்பரப்பு விரிவாக்கத்தில் உச்ச பட்ச அளவை அடைந்தனர். கிழக்கிலிருந்து மேற்காக 3,000 கிலோமீட்டர் பரந்து விரிந்திருந்த ஒரு நிலப்பரப்பின் மீது குறுகிய காலத்திற்கு ஆட்சி புரிந்தனர். இந்த ஆண்டுகளின் போது இவர்களது பேரரசானது கிழக்கே தற்போதைய ஈரானின் நிசாபூரில் இருந்து, தற்போதைய இந்தியாவின் வாரணாசி மற்றும் வங்காளம் வரையிலும், இமயமலை அடிவாரத்தில் இருந்து தெற்கே பாக்கித்தானின் சிந்து மாகாணம் வரையிலும் பரவியிருந்தது.[123]
அந்த்குத் தோல்வி, இவரது அரசியல் கொலைக்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்குள்ளாகவே சன்சபானி அரசமரபின் வீழ்ச்சி மற்றும் வரலாற்றின் மிகப் பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசை உருவாக்கிய செங்கிஸ் கானின் வளர்ச்சி ஆகியவற்றால் குராசான் மற்றும் ஈரானில் இவரது குறுகிய காலத்திற்கு நீடித்திருந்த வெற்றிகள் நடு ஆசியாவின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இசுலாமிய முடியரசுகளுடன் ஒப்பிடும் போது குறைவான முக்கியத்துவம் உடையதாக இருந்தன.[124] திரான்சாக்சியானாவில் துருக்கிய எதிரிகளுக்கு எதிராக முகம்மது வெற்றிகரமாக இல்லாதிருந்த போதிலும்,[125] இதை தவிர்த்து, இந்தியத் துணைக் கண்டத்தில் இவரது வெற்றியானது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியது. முகம்மது ஔபியால் எழுதப்பட்ட 13ஆம் நூற்றாண்டு ஜவாமி உல்-இகாயத் நூலானது "ஹெறாத் முதல் அசாம் வரையிலான அனைத்து பள்ளிவாசல்களிலும் குத்பாவானது சுல்தானின் (கோரி முகம்மது) பெயரில் அறிவிக்கப்பட்டது" என்று குறிப்பிடுகிறது.[126] பிருத்திவிராச் சௌகானின் இராசபுத்திரப் படைகளுக்கு எதிராக இரண்டாம் தரைன் போரில் இவரது தீர்க்கமான வெற்றியானது ஒட்டு மொத்த கங்கை சமவெளியையும் துருக்கிய ஆக்கிரமிப்புக்கு திறந்து விட்டது.[127] குத்புத்தீன் ஐபக்கால் தில்லி சுல்தானகம் நிறுவப்படுவதற்கு இது இறுதியாக வழி வகுத்தது. தில்லி சுல்தானகமானது ஐபக்கின் அடிமை தளபதியான இல்த்துத்மிசால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.[128][129][130] இதைத் தொடர்ந்து வந்த காலங்களில் 13ஆம் நூற்றாண்டின் போது நடு ஆசியாவில் மங்கோலியர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தப்பிப் பிழைத்த ஒரே முக்கிய இசுலாமிய அரசாங்கமாக தில்லி சுல்தானகம் ஆனது.[131][132]
கசனவியப் பேரரசை போலவே கோரிப் பேரரசானது குராசானிலிருந்த தங்களது குடிமக்கள் மத்தியில் பிரபலமற்றதாக இருந்தது. ஜுஸ்ஜனியின் கூற்றுப் படி முகம்மது கடுமையான வரிகளை விதித்தார். தன்னுடைய இராணுவத்தின் செலவினங்களுக்காக துசு பகுதியில் சூறையாடி, சொத்துக்களை பறிமுதல் செய்தார். கோரிக்களுக்கு எதிராக மக்கள் இறுதியாக திரும்புவதற்கு இந்த நிகழ்வுகள் காரணமாயின. குவாரசமியர்களின் தலை நகரான குர்கஞ்சை கோரின் முகம்மது முற்றுகையிட்ட போது குவாரசமியாவிற்கு இராணுவ ரீதியாக குராசான் மக்கள் ஆதரவளித்தனர். இதன் விளைவாக 70,000 வீரர்களைக் கொண்ட ஒரு பெரிய இராணுவத்தை குவாரசமியர்களால் ஒருங்கிணைக்க முடிந்தது. முற்றுகையை இறுதியாக கைவிடும் நிலைக்கு முகம்மதுவை இது தள்ளியது. கோரின் முகம்மது இதன் காரணமாக பின் வாங்கினார். இறுதியில் காரா கிதை படைகளால் சுற்றி வளைத்து தோற்கடிக்கப்பட்டார்.[133][134][83]
கோர் பகுதியானது இவரது ஆட்சியின் போது செழிப்படைந்தது. ஒரு முன்னணி கல்வி மற்றும் கலாச்சார மையமாக உருவானது. மௌலானா பக்கருதீன் ராசி போன்ற இறையியலாளர்களுக்கு இவர் புரவலராக விளங்கினார். கோரிப் பேரரசின் வளர்ச்சியடையாத பகுதிகளில் இசுலாமிய போதனைகளை இவர் போதித்தார். இப்பகுதியின் கட்டடக் கலை அம்சங்களுக்கும் முகம்மது குறுகிய காலத்திற்கு பங்களித்தார். தன்னுடைய தலைநகரான காசுனியில் ஒரு தனித்துவமான இசுலாமிய பளிங்கு கற்களை கட்டமைப்பதில் முதன்மையாக பங்களித்தார்.[131][135]
வட இந்தியாவில் முகம்மதுவால் வெளியிடப்பட்ட நாணயங்கள் இந்திய எடைத் தரம் மற்றும் உலோகத் தூய்மை அளவைப் பின்பற்றின.[139] வங்காளத்தைத் தவிர்த்து இந்தியாவிலிருந்த கோரி நாணயங்கள் படையெடுப்புக்கு முன்னர் இருந்த அதே இந்து உருவங்களைப் பின்பற்றின. இதில் முகம்மதுவின் பெயரானது, வட இந்திய கற்றறிந்த உயர்குடியினரின் மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரபு மொழியில் இல்லை.[140] முகம்மது மற்றும் அவருடைய தளபதிகளால் வட இந்தியாவில் அச்சிடப்பட்ட நாணயங்கள் இந்து தெய்வமான லட்சுமியை தொடர்ந்து கொண்டிருந்தன. இதை சௌகான்களின் நாணய அச்சடிப்பை அடிப்படையாக கொண்டு இவர்கள் அச்சிட்டனர். ஒரு பக்கம் இந்து தெய்வம் லட்சுமி, மற்றொரு பக்கம் சமசுகிருத மொழியில் நாகரி எழுத்து முறையில் முகம்மதுவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.[141] இதே போல் தில்லியில் கோரி நாணயப் புலக்கமானது படையெடுப்புக்கு முந்தைய முறையை பின்பற்றியது. இதில் நந்தியும், ஒரு சௌகான் குதிரை வீரனும் அச்சிடப்பட்டிருந்தனர். முகம்மதுவின் பெயரானது "ஸ்ரீ ஹம்மிரா" என்று அச்சிடப்பட்டிருந்தது. ஹம்மிரா என்பது அமீர் (தளபதி) என்ற சொல்லின் சமசுகிருத வடிவம் ஆகும்.[142]
பின்பர் பேரி புளட் என்ற வரலாற்றாளர் வட இந்தியாவின் பொருளாதார நடை முறையை பூர்த்தி செய்யும் விதமாக படையெடுப்புக்கு முந்தைய நாணய அமைப்புகளை கோரிக்கள் பின்பற்றியது அமைந்தது என்று குறிப்பிடுகிறார்.[143] சுனில் குமார் என்ற வரலாற்றாளர் மேலும் முகம்மதுவால் வெளியிடப்பட்ட நாணயங்கள் உள்ளூர் இந்திய நிதியாளர்கள் மற்றும் வங்கியாளர்களால் இராசபுத்திரர்கள் அதற்கு முன்னர் புலக்கத்தில் விடா அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று குறிப்பிடுகிறார். வட இந்தியாவில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்பட்ட போதும் அவர்கள் இவ்வாறு ஏற்றுக் கொண்டனர் என்கிறார்.[144]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.