குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்
From Wikipedia, the free encyclopedia
குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் (Postpartum period) என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் குழந்தை பிறப்பு என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலத்தைக் குறிப்பதாகும்[1][2]. உலக சுகாதார நிறுவனத்தின் அக்டோபர் 2013 இற்கான அறிக்கையில், குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலமே தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நெருக்கடியான காலமாகவும், இக் காலத்திலேயே தாய், மற்றும் குழந்தையின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது[2][3]. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 125,000 பெண்களும், 870,000 புதிதாகப் பிறந்த குழந்தைகளும், குழந்தை பிறந்து முதலாவது கிழமைக்குள் இறப்பதாகவும், குழந்தை பிறப்பின் பின்னரான முதலாவது நாளிலேயே இவ்வகையான இறப்பு அதிகம் நிகழ்வதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது[2]. உலகம் முழுவதுமாக ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் பிறந்து ஒரு மாத காலத்திற்குள், இவற்றில் அநேகமானவை ஒரு கிழமைக்குள் இறப்பதாகவும், தாயின் நலக் குறைபாடும், ஊட்டச்சத்துக் குறைபாடும், தாய்க்கு கருத்தரிப்பின்போதும், குழந்தை பிறப்பின் போதும், அதற்குப் பின்னரான காலத்திலும் சரியான பராமரிப்பு வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது[4].