குறுங்கோழியூர்க் கிழார்
From Wikipedia, the free encyclopedia
குறுங்கோழியூர்க் கிழார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். 'குறுங்கோழியூர்' என்ற ஊரில் வாழ்ந்தவர். 'கிழார்' என்றால் வேளாண்மைத் தொழில் செய்பவர் என்று பொருள். எந்த அரசர்களையோ வள்ளல்களையோ அண்டி வாழ்ந்தவரல்லர்.
இவர் பாடியதாகப் புறநானூற்றில் மூன்று பாடல்கள் உள்ளன. அவையாவன: 17[1], 20[2], 22[3] என்பன. இம்மூன்றும் சேர மன்னனான யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களாகும். இம்மன்னனே ஐங்குறுநூறு தொகுப்பினைத் தொகுப்பித்தவன் என்று கூறுவர். இவன் தலையாலங்கானத்துப் போரைப் பாண்டியன் நெடுஞ்செழியனோடு செய்தபோது, நெடுஞ்செழியனால் சிறையிடப்பட்டவன். சிறையிலிருந்து இவன் தப்பிச் சென்றிருக்கிறான். அகச் சான்றுகளாக இதனைக் குறுங்கோழியூர்க் கிழார் தனது பாடல்களில் சுட்டிக் காட்டுகின்றார்.