கண்புரை அறுவைச் சிகிச்சை
From Wikipedia, the free encyclopedia
கண்புரை அறுவை (Cataract surgery) என்பது மாந்தக் கண்ணில் உருவாகிய காட்சி மறைக்கும் இயற்கையான படிக வில்லையை (இது கண்புரை எனப்படுகிறது) நீக்கும் மருத்துவச் செயல்முறையாகும். அகவை முதிரும்போது வளர்சிதை மாற்றங்களால் படிகவில்லை நாரிழைகளில் கண்புரை உருவாகி அதன் ஒளிபுகும் தன்மையைக் குறைத்து பார்வைக் குறைபாட்டை அல்லது பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. அகவை முதிர்வு மாற்றங்களால் ஏற்படும் இந்தக் கண்புரை மட்டுமன்றி, இளங்குழவிகளும் பிறப்புவழி கண்புரையுடன் பிறப்பதுண்டு. நேரடி கண்நேர்ச்சியாலோ (கண்விபத்தாலோ) கண்சொட்டு மருந்துகளாலோ, குறிப்பாக பருவகங்களின் (steroids) நெடுங்காலப் பயன்பாட்டாலோ கண்புரை உருவாகலாம். அகச் சிவப்புக் கதிர்களுக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சுக்கும் நெடுங்காலத்துக்கு ஆட்பட்டாலும்கூட கண்புரை உருவாகும். பலரின் முதல் அறிகுறிகளாக விளக்குகளின் ஒளிக்குக் கன்பளிச்சிடுதல், இரவில் சிறுவிளக்கொளிக்கும் கண்பளிச்சிடுதல், குறைவான ஒளிமட்டங்களிலும் கண்கூசுதல் ஆகியவை அமைகின்றன. கண்புரை அறுவையின்போது, நோயாளியின் இயற்கையான புரையமைந்த வில்லை செயற்கை வில்லையால் மாற்றி வில்லையின் ஒளிபுகம் தனமை மீட்கப்படுகிறது.[1]
கண்புரை அறுவை | |
---|---|
பிரிவிளக்காய்வில் புலப்படும் மாந்தக் கண் புரையின் பெருக்கக் காட்சி | |
ICD-9-CM | 13.19 |
MeSH | D002387 |
மெட்லைன்பிளஸ் | 002957 |
இயற்கையான வில்லை அறுவையால் நீக்கப்பட்டதும், செயற்கை கண்ணக வில்லை பொருத்தப்படுகிறது (கண்மருத்துவர்கள் இதைப் "பதிக்கப்படுகிறது" என்கின்றனர்). கண்புரை அறுவை கண் மருத்துவரால் இதய மின்னலை வரைவிவழிக் கண்காணிப்புடன் அறுவையரங்கில் அல்லது மருத்துவ மனையில் செய்யப்படுகிறது. இதற்கு விழிவெளியுறை அல்லது விழிப்பின்னுறை விழிமேலுறைப் பகுதி மரத்துபோகச் செய்யப்படுகிறது. இம்முறை நோயாளிக்கு மிகவும் ஏந்தானதாகும். ஏறத்தாழ 90% அறுவைகள் நல்ல பார்வையுடனும் மிகக் குறைந்த சிக்கலுடனும் வெற்றிகரமாகச் செய்யப்படுகின்றன.[2] கவனிப்பாக குறைந்தது ஆறு மணி நேரத்துக்குள் பகல் நேரத்தில் குறைந்த இடையீட்டுடனும் உயர் பொறுப்புடனும் மிகச் சிறிய துணிப்புடனும் மிக விரைவான அறுவைக்குப் பிந்திய மீட்புடனும் கண்புரை அறுவை உலகெங்கும் செய்யப்படுகிறது.