கடிதத்தாள்
From Wikipedia, the free encyclopedia
அஞ்சலியலில் கடிதத்தாள் என்பது அஞ்சல் நிர்வாகம் ஒன்றினால் வெளியிடப்படுகின்ற ஒரு அஞ்சல் எழுதுபொருள் ஆகும். கடிதம் எழுதக்கூடிய இந்தத்தாளை உரிய முறைப்படி மடித்து ஒட்டி, தேவையானால் அரக்கினால் முத்திரையிட்டுக் கடித உறை பயன்படுத்தாமல் அஞ்சலில் அனுப்ப முடியும். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன் தாள்களில் கடிதங்களை எழுதி தாளின் எழுதப்படாத பின்பக்கம் வெளிப்புறம் வருமாறு மடித்து ஒட்டி வெளிப்பக்கத்தில் முகவரியை எழுதி அனுப்பும் வழக்கம் இருந்தது. அக்காலத்தில் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்பட்ட இந்த முறையை அடியொற்றியே கடிதத்தாள் முறை உருவானது.
கடிதத்தாள் என்பது, கடித உறைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் பயன்பட்ட அஞ்சல்தலையிடப்படாத மடிப்புத்தாள் கடிதங்களையே குறித்தது. 19ம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு முன்னர் கடித உறைகள் பயன்பாட்டில் இருக்கவில்லை. பலநாடுகளில், கடித உறையையும் கூடுதல் தாளாகக் கருதிக் கட்டணம் அறவிடப்பட்டதால், அவ்வாறு அஞ்சல் அனுப்புவதற்கு கூடுதல் செலவானதே இதற்கான காரணம்.
முன்கட்டணம் செலுத்தப்பட்ட கடிதத்தாள்கள், அஞ்சல்தலை அச்சிடப்பட்டு அல்லது வேறு அடையாளம் இடப்பட்டு அஞ்சல் நிர்வாகங்களால் வெளியிடப்படுவதால் அவை அஞ்சல் எழுதுபொருட்கள் ஆகின்றன. முன்கட்டணம் அறவிடப்படுவதைக் குறிக்கும் அஞ்சல்தலை அச்சிடப்படாத கடிதத்தாள்களைத் தனியார் நிறுவனங்களும் வெளியிடுவது உண்டு. இவ்வாறான கடிதத்தாள்களில் கடிதம் அனுப்பும்போது அஞ்சல்தலை ஒட்ட வேண்டும். பெரும்பாலான நாடுகளின் அஞ்சல் நிர்வாகங்கள் ஏதோவொரு கட்டத்தில் கடிதத்தாள்களை வெளியிட்டுள்ளன. ஆனாலும், இப்போது கடித உறைகளில் கடிதம் அனுப்புவதே விரும்பப்படுவதால், பெரும்பாலானவை இப்போது வான்கடிதத்தாள் தவிர்ந்த கடிதத்தாள்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டன.