ஒட்டகம்
From Wikipedia, the free encyclopedia
ஒட்டகம் (ஒலிப்புⓘ) என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஒட்டகங்கள் | |
---|---|
ஒற்றைத் திமில் ஒட்டகம், Camelus dromedarius | |
இரட்டைத்திமில் ஒட்டகம், Camelus bactrianus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Camelidae |
சிற்றினம்: | Camelini |
பேரினம்: | Camelus லின்னேயசு, 1758 |
இனங்கள் | |
இரட்டைத்திமில் ஒட்டகம் |
ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.
ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது [2]. மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், ஆசுமாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை) [2]
ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34° செல்சியசு முதல் 41° செ (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.