எலும்பு நோய்களை ஆராயும் இயல் From Wikipedia, the free encyclopedia
எலும்பு நோய்கள் (Bone disease) பல்வேறு காரணிகளால் உண்டாகின்றன. அவற்றுள் சீராண உணவு உண்ணாமை, வயது, ஆண்-பெண் உடற்செயலியல் மாறுபாடுகள், மது போன்ற பழக்க வழக்கங்கள், பிறவிக்குறைபாடுகள், தொடர்ந்து மருத்துகள் எடுத்தல், விபத்து ஆகியன முக்கிய காரணிகளாகும்.[3] சீராக எல்லா எலும்புகளினின்றும் கால்சியம் இழப்புத் தோன்றலாம். இந்நோய் நார்த் திசுப் பைகள் கொண்ட எலும்புஅழற்சி [4] நோய் அல்லது வான் டெக்ளிங்ஹாசன் நோய் எனப்படும். இது தவிர ஒன்றோ அதற்கு மேற்பட்ட பைகளோ போலிப் புதுப் பெருக்குக் கட்டிகளோ தோன்றலாம். இரண்டாவதாக கூறப்பட்டவை தாடை எலும்புகளில் அதிகமாகக் காணப்படும் முதலில் எக்ஸ் கதிர்கள் பட அறிகுறிகள் மண்டை ஓட்டிலும் விரல் எலும்புகளிலும் தோன்றத் தொடங்கும். எக்ஸ் கதிர்ப் படத்தின் எலும்பு அடர்த்தி குறைவும் எலும்பு உறை சவ்வின் கீழ் அரிப்பும் காணப்படும் எலும்புகளிலும் மூட்டுகளிலும் இனம் காண முடியா வலியுடன் மருத்துவரை அணுகும் இந்நோயாளிகளின் நோய் சில நேரங்களில் மூட்டு வாதம் என்று தவறாக அடையாளம் கொள்ளப்படுவதும் உண்டு.
எலும்பு நோய்களும், எலும்பு வலிகளும் பல காரணங்களால் உண்டாகின்றன.[5] இந்த நோய் வரும் உடற்பாகம், அதனால் ஏற்படும் உடல் மாறுபாடுகளின் தோற்றம் ஆகியவற்றைக்கொண்டு, பின்வருவனவற்றைக் கூறலாம். பிறவி நோய்கள், உடற்சிதைவுகள், அழற்சி நோய்கள், பிற உயிர்களால் ஏற்படும் நோய்கள், கழலைகள், நீர்க்கட்டிகள், பொதுவாக ஏற்படும்கோளாறுகள் ஆகியன அதிகம் ஏற்படுவனவாகும்.
ஒரு குழந்தைப் பிறக்கும் போதே, உடல் ஊனத்துடன் பிறப்பதுண்டு. கருப்பையிலேயே, எலும்புகள் எதுவுமே வளராமல் இருக்கலாம். அல்லது சில எலும்புகள் இல்லாமலோ, குறைந்தோ, சரியான உருவமின்றியோ, மிகையாக வளர்ந்தோ காணலாம். இவற்றால் உடல் வளர்ச்சியிலும், உறுப்புக்களிலும் குறுகல், கோணல் உண்டாகலாம். எலும்பு பருத்தும், முண்டு தட்டியும் ஊனம் ஏற்படலாம். இத்தகு பிறவிநோய்களுக்குத் தகுந்த, உடல் அறுவைச் சிகிச்சைகளால், பிறவி ஊனங்களை முறையாக நீக்கும் தனி மருத்துவப் பிரிவு உள்ளது. இதனை அவயவச்சீரியல் என்பர். போலியோ போன்ற நோய்தாக்கத்தினால் பிறந்த சிலவருடங்களுக்குப் பின் உடல் ஊனம் நிரந்தரமாக ஏற்படுவதுண்டு.
கணைநோய் (rickets)[6] : குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் இந்த கணை நோய், முக்கியமானது ஆகும். எலும்பின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின் 'டீ', கால்சியம், பாஸ்பரஸ் முதலியவை போதாமையால் எலும்பின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும், இதனால் எலும்புகள் வலிமையிழந்து வளைந்து, இயல்புக்கு மாறான மாறுதல்கள் குழந்தைகள் உடம்பில் தோன்றுகின்றன.[7]
இவிங் கட்டி (Ewing) என்ற நீண்ட எலும்புகளின் உட்புறத்திலே,தோன்றும் இந்த கட்டியானது, ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயதிற்குட்பட்ட சிலருக்கு உண்டாகிறது. பிறகு விரைவில் பருத்து, மற்ற எலும்புகளுக்குப் பரவுகிறது. வெங்காயத்தோல்கள் அடுக்கடுக்காகச் சேர்ந்து உருண்டை உருவம் பெறுவதைப்போல, எக்ஸ்-கதிர்ப் படத்தில் இக்கட்டியுள்ள இடத்தில் எலும்புக் கோடுகள் அடுக்கடுக்காகத் தெரியும், கடுமையானை இந்த நோயை, செறிந்த எக்ஸ்-கதிர் வீச்சு வழியேயும், தொடர்ந்து கட்டியை நீக்கும் அறுவை மருத்துவமும் அவசியமாகும்.
ஆசுட்டியோசெனிசிசு இம்பெர்பெக்ட்டா (Osteogenesis imperfecta)[8] என்னும் எலும்பு நோய் கண்ட குழந்தையின் எலும்புகள் சுலபமாக உடைந்து விடுவதுடன், விரைவில் ஒன்று சேர்ந்துவிடும். இவ்விதம் உடைந்து உடைந்து சேர்ந்து எலும்புகளால், குழந்தைகளின் உருவம் உருக்குலைந்து அழகிழந்து காணப்படும்.
இளம் பிள்ளைககளுக்கு, அவர்களின் உடல் எலும்புகள் பலவற்றில், இள எலும்பு முனைகளான பாகங்களிற் சிறு காயங்களின் காரணமாக நோய்கள் உண்டாகின்றன. இந்நோய்களைக் காசநோய் என்று தவறாக எண்ணப்படுவதும் உண்டு. இந்நோய்களை எக்ஸ்-கதிர்ப் படங்களின் மூலமாகக் கண்டுபிடித்தவரின் பெயர்களே, இந்நோயுக்கு பெயராக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பெர்த்தி நோய், கேலர் நோய், கம்மல் நோய், சிவர் நோய் ஆகியவற்றைக் கூறலாம். இந்நோய்களால் அதிக வலி உண்டாவதில்லை என்றாலும், அதிக. ஓய்வே, இந்நோய்களைக் குணப்படுத்துவதாகக் கருதினாலும், தக்க வைட்டமின் கலந்த உணவும், கால்சியம் கொண்ட மருந்துகளும், சூரிய வெளிச்சமும் நோய் தீர்க்கும் முறைகளாகும்.
விபத்துகளின் காரணமாக உடல் உறுப்புகளில் அடிபட்டதால் உண்டாகும் குருதிக் கட்டிகள், எலும்பு முறிவுகள் போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. குருதிக் கட்டிகள், சாதாரணமாகத் தோலுக்கு அடியில் ஏற்படும். மூடியுள்ள கால், கை, எலும்புகளில் அதிகம் ஏற்படுகிறது. இவற்றிற்கு ஓய்வு கொடுத்துக் குளிர்ச்சியான மருந்துகளையும், அழுத்தங்களையும் தரலாம். உள்ளுக்கு அயோடைடுகள் கொடுப்பர். எலும்பு முரிதல் அல்லது உடைதல் பல காரணங்களால், பல வகைகளில் உண்டாகிறது. அடிபட்ட இடத்திலாவது, அல்லது மற்றோரிடத்திலாவது முரிவு நேரிடலாம். தசைகளின் வேகத்தாலும் எலும்பு உடையலாம். நோய்களால் ஏற்கெனவே நொந்து போன எலும்புகள் தாமாகவோ அல்லது வெகு சிறிய தாக்குதலாலோ உடையலாம்.[9]
விபத்தின் போது எலும்பு நீளத்திலாவது, குறுக்கிலாவது உடையும் போதும், உடற் கோணலிலாவது உடையும் போதும், எளிய முரிவு ஏற்படும் போதும், பலவித கலப்பு முரிவுகளின் போதும், விப்த்தின் போது ஏற்படும் தாக்கத்தால், எலும்பின் பக்கத்தில் இருக்கும் உறுப்புக்களும் சிதைவடையும் போதும், முற்றும் முரியாமல் பிளவு ஏற்பட்டிருந்த சூழ்நிலையிலும், அதற்கு ஏற்றாற் போல, மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. குழந்தைகளின் எலும்பில் உண்டாகும் இளமுரிவும், பல சிறு துண்டுகளாக முரியும் நொறுங்கு முரிவும், துண்டுகள் ஒன்றுக்குள் ஒன்று புதைந்து மாட்டிக் கொள்ளும் ஒட்டுமுரிவும் சிக்கலான மருத்துவ நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன.
குருதியின் வழியாகத் தொற்று ஏற்படுவதால், எலும்பின் மேற் சவ்வு, உள்ளெலும்பு, மச்சை ஆகிய அழற்சியால் தாக்கப்பட்டு இயற்கையானத் தன்மையை இழக்கும். அதனால் எலும்புகள் அசையும் போது, வலி, வீக்கம், சிவப்புத் தழும்புகள், காய்ச்சல், சீழ்கோத்தல், அழற்சி எலும்புக்கு அருகிலுள்ள பூட்டுக்களில் நீரேற்றம், அவை பிசகிப்போதல் முதலிய அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவைகள் தீவிரத்தைப் பொறுத்து, மந்தம், சீழ்க்கட்டிகள் (Abscesses[10]), உளுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. இவைகள் அனைத்தும் முக்கிய காரணமாக,. பாக்டீரியா தாக்கமே ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.