சமூக அறிவியலில்எதிர்பாராத விளைவுகள் (Unintended consequences) என்பது குறித்த நோக்குடன் ஒரு செயலை மேற்கொள்ளும் போது, எதிர்பாராது விளையும் வினைகளைக் குறிக்கும். இப்பெயர் இருபதாம் நூற்றாண்டில் சமூகவியலாளர் இராபர்ட் கே. மெர்ட்டன் என்பவரால் பரவலாக்கப்பட்டது.[1]
எதிர்பாராத விளைவுகளை மூன்று வகையாகப் பகுக்கலாம்:
எதிர்பாராத நற்பயன் (நல்லூழ், எதிர்பாராத சாதக வினை)
எதிர்பாராத தீவிளைவு (எதிர்பார்த்த விளைவுடன் சேர்ந்து ஏற்படும்)
பாதக விளைவு (ஒரு செயலுக்கு எதிர்பார்த்த நல்விளைவுக்கு பதிலாக பாதகமான விளைவு ஏற்படல்)
போர்க்காலத்தில் ஆழமில்லாக் கடற்பகுதிகளில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படுதல், பல செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கியுள்ளது. இந்த சூழல் மண்டலங்கள் அறிவியலாளர்களுக்கு ஆய்வுக்களங்களாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு கடல் பாயும் கேளிக்கைக் களங்களாகவும் விளங்குகின்றன.[2][3][4][5][6]
1920களில் ஐக்கிய அமெரிக்காவில்மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். ஆனால் இதன் விளைவாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளக்கடத்தல் ஆகிய சட்டவிரோத செயல்கள் அதிகரித்தன. சிறிய மது வர்த்தகர்கள் நலிவடைந்து பெரும் குற்றக்குழுக்கள் சட்டவிரோத மதுவர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. போதைப் பொருட்களுக்கு எதிராக தற்போது நடைபெறும் சமரிலும் இதே போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டுள்ளன.[7][8][9][10]
19ஆம் நூற்றாண்டில் தியோபோல்டு மாத்தியூ என்பார் அயர்லாந்து நாட்டில் ஒரு கள்ளுண்ணாமை இயக்கத்தைத் தொட்ங்கினார். அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டனர். ஆனால் மதுவுக்கு பதிலாக அதை விட நச்சுத்தன்மையும் தீப்பிடிக்கும் தன்மையும் கொண்ட டைஎதில் ஈத்தர் (Diethyl ether) எனும் வேதிப்பொருளைப் பருகத் தொடங்கினர்.[11]