![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Philae_Temple_R03.jpg/640px-Philae_Temple_R03.jpg&w=640&q=50)
எகிப்தியக் கோவில்கள்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தியக் கோவில்கள் பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களினதும், எகிப்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்த மக்களினதும் வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்டவையாகும். இக்கோவில்கள் அதில் குடியிருந்த மன்னர்களினது அல்லது தெய்வங்களினது இல்லமாகக் கருதப்பட்டது. இங்கு எகிப்தியர்கள் பலியிடல், விழாக்கள் போன்ற தமது சமயச் சடங்குகளை மேற்கொண்டனர். இக்கோவில்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பாரோக்களின் கடைமையாகக் காணப்பட்டது. இதற்காக பாரோக்கள் குறிப்பிடத்தக்களவு வளங்களை கோவிலின் கட்டுமானத்துக்கும் பராமரிப்புக்கும் ஒதுக்கினர். பெரும்பாலான சடங்குகள் பாரோக்களால் நியமிக்கப்பட்ட பூசகர்களினால் நடத்தப்பட்டன. தேவையான போது பாரோக்கள் பெரும்பாலான சடங்குகளை மேற்கொள்ள பூசகர்களை அனுமதித்தனர். எனினும் மக்களுக்கு இவ்வாறான சடங்குகளில் நேரடியாகக் கலந்துகொள்ளவோ கோவிலின் மிகவும் புனிதமான இடங்களில் நுழையவோ அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கோவிலானது எகிப்திலிருந்த எல்லா வகுப்பு மக்களுக்கும் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்தது. அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்யவும், காணிக்கைகளைச் செலுத்தவும், அங்கிருந்த தெய்வத்திடம் அறிவுரைகளைக் கேட்பதற்கும் சென்றனர்.
![Stone building fronted by a tall gateway, a colonnade, and another gateway.](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Philae_Temple_R03.jpg/640px-Philae_Temple_R03.jpg)
கோவிலின் முக்கியப் பகுதி கருவறையாகும். இங்கு அக்கோவிலிலுள்ள தெய்வத்தின் உருவச்சிலை காணப்பட்டது. கருவறைக்கு வெளியே இருந்த அறைகள் மிகப் பிரமாண்டமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டன. எனவே, கி.மு.4000இல் சிறியவையாக இருந்த இந்தக் கோயில்கள் கி.மு. 1550-1070 காலப்பகுதியில் எகிப்திய ராச்சியத்தின் கீழ் பிரமாண்டமான மாளிகைகளாக வளர்ந்தன. இம் மாளிகைகளே பண்டைய எகிப்தியக் கட்டடக்கலையின் மாபெரும் உதாரணமாகவும், நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் கட்டடமாகவும் காணப்படுகின்றன. அவர்களது வடிவமைப்பில் மூடப்பட்ட மண்டபங்கள், திறந்தவெளி அரங்குகள், விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பாதையில் அமைக்கப்பட்ட பாரிய நுழைவாயில்கள் என்பன காணப்பட்டன. இவைதவிர, கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வெளிமதிலின் உள்ளே பல்வேறு இரண்டாம் நிலைக் கட்டடங்களும் காணப்பட்டன.
இவ்வாறான கோவில்கள் பாரியளவிலான நிலங்களையும் கொண்டிருந்தன. அந்நிலங்களைப் பராமரிப்பதற்கென ஆயிரக்கணக்கான வேலையாட்களையும் அது கொண்டிருந்தது. இதனால் கோவில்கள் சமய நிலையங்களாக மட்டுமன்றி முக்கிய பொருளாதார மையங்களாகவும் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை நிர்வகித்த பூசாரிகள் ஆட்சியதிகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பிரயோகித்தனர். மேலும் சிலவேளைகளில் மன்னர்களின் அதிகாரத்துக்கு சவால் விடுமளவுக்கும் அவர்கள் முன்னேறியிருந்தனர்.
எகிப்தில் கோவில் கட்டும் பணி எகிப்தின் வீழ்ச்சி மற்றும் ரோமப் பேரரசுக்கு அடிமைப்படும் வரையில் தொடர்ந்தது. கிறித்தவ மதத்தின் வருகையைத் தொடர்ந்து எகிப்திய சமயம் பாரிய இடைஞ்சல்களை எதிர்நோக்கியது. அதன் கடைசிக் கோவில் கி.பி.550ல் மூடப்பட்டது.பல நூற்றாண்டு காலமாக இக் கட்டடங்கள் அழிவையும் தொடர் புறக்கணிப்பையும் எதிர்நோக்கின. ஆயினும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பண்டைய எகிப்தைப் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் பரவியது. இதனால் எகிப்தியவியல் எனும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியியலும் தோன்றியது. எகிப்திய நாகரிகத்தின் சிதிலங்களைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளும் இங்கு வரத்தொடங்கினர்.அதிகளவிலான கோவில்கள் இன்று தப்பியுள்ளன. இவற்றுட் சில, உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களாகவும் மாறியுள்ளன. நவீன எகிப்தின் பொருளாதாரத்துக்கு இவை பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. எகிப்தியவியலாளர்கள் தப்பிய கோவில்கள் மற்றும் அழிந்த கோவில்களின் எச்சங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஏனெனில் இவை பண்டைய எகிப்திய சமூகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான மிக இன்றியமையாத ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.