உலகம்பரவுநோய்
From Wikipedia, the free encyclopedia
உலகம்பரவுநோய் அல்லது பெருந்தொற்று (pandemic) என்பது கொள்ளைநோய் ஒன்று தொற்றுநோயாக இருந்து, அந்த நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய அளவில் மக்களைத் தாக்குவதாகும்[1]:55. இது உலகம் முழுமைக்கும்கூட பரவக்கூடும். அதாவது கண்டம், உலகம் போன்ற பெரும் பகுதியில் உள்ள மக்களைத் தாக்கும் கொள்ளை நோய் தொற்றைக் குறிக்கும்.
பெரியம்மை[2], காசநோய்[3][4][5] போன்ற நோய்கள் இவ்வாறு பரவிய நோய்களாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி[6][7], பறவைக் காய்ச்சல்[8], எச்1.என்1 சளிக்காய்ச்சல்,[9]கொரானா போன்றன அண்மையில் பரவிய உலகம்பரவுநோய்கள் ஆகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, "உலகப் பரவற் தொற்று" என்பதற்குப் பின்வரும் நிலைமைகள் தேவை.
- மக்களுக்குப் புதிதான நோய் உருவாதல்.
- கடுமையான நோய் உண்டாக்கும் தொற்று நோய்க்காரணிகள்.
- மனிதர்களிடையே நோய் இலகுவாகப் பரவுதல்.
பரந்த பகுதியில் இருப்பதாலோ, பெருமளவில் மக்கள் கொல்லப்படுவதாலோ மட்டும் ஒரு நோய் உலகம்பரவுநோய் ஆவதில்லை. இது ஒரு தொற்றுநோயாக இருத்தலும் வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமளவில் மக்கள் இறப்பதற்குக் காரணமாகும் புற்றுநோய் உலகம்பரவுநோய் அல்ல.