ஈரானின் மண்டலங்கள்
From Wikipedia, the free encyclopedia
ஈரானின் மண்டலங்கள் என்பதை அந்நாட்டினர் சாரெசுடன் (பாரசீக மொழி: شهرستان šahrestân, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்கள் மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும்.
ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் மாவட்டங்கள் போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் தலைநகராகச் செயல்படுகிறது.
ஒவ்வொரு மண்டலமும் பஃர்மன்தாரி எனப்படும், அலுவலகத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்த அலுவலகமானது, வெவ்வேறு பொது நிகழ்வுகளையும், முகமை வழி செயற்படும் செயற்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பினை பஃர்மந்தர் என்ற மண்டல ஆளுநர் ஆட்சி செய்வார். இவரே இம்மண்டலத்தின் தலைமை அதிகாரியாக செயற்பட்டு, இம்மண்டலத்தை வழிநடத்துவார். ஈரான் மாகாணங்களில், அதிக மண்டலங்களைக் கொண்ட மாகாணம், பாருசு மாகாணம் ஆகும். அம்மாகாணத்தில் 23 மண்டலங்கள் உள்ளன. ஒரே ஒரு மண்டலத்தை மட்டும் பெற்று, கொம் மாகாணம் ஈரானின் மிகக் குறைவான மண்டலத்தை உடைய மாகாணமாகத் திகழ்கிறது. இந்நாட்டினில் மொத்தம், 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 324 மண்டலங்கள் இருந்தன.