இழையுருப்பிரிவு
mitosis / From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் இழையுருப்பிரிவு (Mitosis) என்பது மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களில் (கலங்களில்) உயிரணுப்பிரிவு நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு உயிரணுக்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் நிறப்புரிகளும், மரபியல் உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத்ததாகக் இருக்குமாறும் நிகழும் செயல்முறையாகும். பொதுவாக இழையுருப்பிரிவு நிறைவடைந்தவுடன் குழியவுருப்பிரிவு (Cytokinensis) நடைபெறும்.[1] குழியவுருப்பிரிவின் போது புன்னங்கங்கள், குழியவுரு, கல மென்சவ்வு என்பன இழையுருப்பிரிவின் போது தோற்றுவிக்கப்பட்ட இரு மகட்கலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இழையுருப்பிரிவு மெய்க்கருவுயிரிகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒன்றாகும். இது பாக்டீரியா, ஆர்க்கியா ஆகிய நிலைக்கருவிலிகளில் நடைபெறுவதில்லை. வெவ்வேறு நிலைக்கருவிலி வகைகளில் வெவ்வேறு விதமாக இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது. விலங்குக் கலங்களில் முன் அனுவவத்தையின் போது கருவுறை/ கரு மென்சவ்வு அழிந்து, கலத்தினுள்ளே நிறமூர்த்தங்கள் பகிரப்படுகின்றன. பூஞ்சைகளிலும் சில புரொட்டிஸ்டுக்களிலும் கரு மென்சவ்வு அழிவடைவதில்லை. கரு மென்சவ்வு அவ்வாறே இருக்க கருவினுள்ளே இழையுருப்பிரிவு நடைபெறுகின்றது. பின்னர் கருவும், கலமும் பிரிகின்றன (பூஞ்சையில் கரு மாத்திரமே பிரிகின்றது-கலம் பிரிவடைவதில்லை). இழையுருப்பிரிவே பல்கல உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்குக் காரணமாகின்றது. ஒருகல நுகம் இழையுருப்பிரிவு மூலமே பல்கல நிறையுடலியாக மாற்றமடைகிறது. அதாவது இழையுருப்பிரிவு மூலம் உருவாகிய ஒரு மனிதனின் உடலிலுள்ள கலங்கள் அமைப்பு, உருவம், தொழில் என்பவற்றால் மாறுபட்டாலும், அவை அனைத்தும் ஒரே மரபணுத்தகவலையே கொண்டுள்ளன. பல்கல உயிரினங்களில் பொதுவாக வளர்ச்சிக்காகவே இழையுருப்பிரிவைப் பயன்படுத்தினாலும், சில வேளைகளில் இலிங்கமில் இனப்பெருக்கத்துக்கும் இழையுருப்பிரிவு பயன்படுத்தப்படுகின்றது. இழையுருப்பிரிவு பொதுவாக ஐந்து அவத்தைகளில் நிகழ்கின்றது. இழையுருப்பிரிவு ஆரம்பிக்கையில் ஒரு கலமும் முடிவுறும் போது இரு கலங்களும் இருக்கும். அவத்தைகள்:
- முன்னவத்தை (prophase)
- முன் அனுவவத்தை (prometaphase)
- அனுவவத்தை (metaphase)
- மேன்முக அவத்தை (anaphase)
- ஈற்றவத்தை (telophase)
- முன்னவத்தை: கருவிலுள்ள நிறமூர்த்தவலை சுருளடைந்து நிறமூர்த்தங்களை உருவாக்குகின்றன.
- முன் அனுவவத்தை: கருமென்சவ்வு அழிவடைகிறது. புன்மையத்திகளால் உருவாக்கப்பட்ட கதிர்நார் நுண்புன்குழாய்கள் நிறமூர்த்தத்தின் மையப்பாத்துடன் இணைகின்றன.
- அனுவவத்தை: நிறமூர்த்தங்கள் மத்திய கோட்டுத்தளத்தில் அடுக்கப்படுகின்றன.
- மேன்முக அவத்தை: நிறமூர்த்தங்கள் பிரிகின்றன, கதிர்நார்கள் சுருக்கமடைகின்றன.
- ஈற்றவத்தை: நிறமூர்த்தங்கள் குலைகின்றன. நிறமூர்த்த வலையை சூழ புதிய கரு மென்சவ்வுகள் உருவாகின்றன. குழியவுருப்பிரிவு ஆரம்பமாகியுள்ளது; இதில் கலங்கள் பிரியும் பிரதேசம் பிளவுச்சால் எனப்படும்.