பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
இலாகூர் (Lahore; பஞ்சாபி: لہور; உருது: لاہور ⓘ) பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது முகலாயரின் நந்தவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாக்கித்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $58.14 பில்லியன் அகும்.[1][2] பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா) பண்பாடு மையமாக இலாகூர் விளங்குகிறது.,[3][4][5] பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [6][7]
லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியப் பேரரசு காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாக்கித்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.
லாகூரின் துவக்கமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் இலாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் பாக்கித்தானின் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் இலாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் இலாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.[8]
பின் இலாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது.[9] பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாக்கித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன.[10] 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் இலாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக இலாகூர் உள்ளது.[11]
இலாகூர் எனும் பெயர் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இதன் பெயரானது லோஹார், லொஹர், ராவர் என்ற பெயர்களில் முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.[12] அல்-பிருனி எனும் அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ எனும் எழுத்தாளர் 11-ஆம் நூற்றாண்டில் தான் எழுதிய கனன் எனும் நூலில் லோஹவர் என்ற பெயரில் இலாகூர் நகரத்தினைக் குறிப்பிடுகிறார்.[12] அமீர் குஸ்ராவ் எனும் எழுத்தாளர் தில்லி சுல்தானகத்தில் வாழ்ந்த போது இந்த நகரத்தினை லஹானுர் என்று குறிப்பிட்டுள்ளார். [13] ராஜ்புத்தின் காலத்தில் இந்த நகரத்தின் பெயரானது லவ்கோட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.