From Wikipedia, the free encyclopedia
இரமாதேவி சௌத்ரி( Ramadevi Choudhury) (பிறப்பு: 1899 திசம்பர் 3 - இறப்பு: 1985 சூலை 22),இவர், இந்திய சுதந்திரப் போராளியும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். [1] ஒடிசா மக்களால் இவர் மா (தாய்) என்று அழைக்கப்பட்டார்.
இரமாதேவி சௌத்ரி | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ରମାଦେବୀ ଚୌଧୁରୀ |
பிறப்பு | சத்தியபாமாபூர் கிராமம், கட்டக் மாவட்டம் | 3 திசம்பர் 1899
இறப்பு | 22 சூலை 1985 85) கட்டக், ஒடிசா | (அகவை
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | மா இரமாதேவி |
பணி | இந்திய சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி |
இவர் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்ட கோபால் பல்லவ் தாசின் மகளும் மற்றும் உத்கல் கௌரப் மதுசூதன் தாசின் மருமகளும் ஆவார். தனது 15 வயதில், அப்போதைய துணை ஆட்சியராக இருந்த கோபபந்து சௌத்ரி என்பவரை மணந்தார்.
தனது கணவருடன் சேர்ந்து, 1921இல் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். [2] மகாத்மா காந்தியால் இவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். [3] மேலும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். சுதந்திர இயக்கத்தில் சேர பெண்களை ஊக்குவிப்பதற்காக இவர் ஒவ்வொரு கிராமமாகச் செல்வது வழக்கமாக இருந்தது. ஜெய் பிரகாஷ் நாராயண், வினோபா பாவே மற்றும் இவரது மாமா மதுசூதன் தாசு ஆகியோர் இவரை பாதித்த மற்றவர்களாவர். 1921ஆம் ஆண்டில், இவர் காந்திஜியுடன் முதல் சந்திப்பை மேற்கொண்டார். மேலும் தனது கணவருடன் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். அதே ஆண்டு இவர்கள் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து காதி அணியத் தொடங்கினர். 1930ஆம் ஆண்டில், இவர் ஒரிசா மட்டத்தில் உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். கிரான்பாலா சென், மாலதி தேவி, சரளா தேவி, பிராணகிருட்டிணா பதியாரி போன்ற பிற ஆர்வலர்களுடன் இஞ்சூடி மற்றும் சிறீஜாங்கிற்கு சென்றார். இவரும் இவரது சகாக்களும் 1930 நவம்பரில் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயர்களால் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவரும் (1921, 1930, 1936, 1942 இல்) சரளா தேவி, மாலதி சவுத்ரி போன்ற பிற பெண்களும் சுதந்திர ஆர்வலர்களுடன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். [4] [5] [6] இவர் இந்திய தேசிய காங்கிரசின் 1931 கராச்சி அமர்வில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில், அடுத்த அமர்வை ஒரிசாவில் நடத்துமாறு தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். ஹசாரிபாக் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 1932ஆம் ஆண்டில், இவர் ஹரிஜன் நலனில் தீவிரமாக ஈடுபட்டார். தீண்டாமையை ஒழிப்பதற்காக காந்திஜியின் அறிவுறுத்தலின் கீழ் அஸ்ப்ரூஷ்யாதா நிபரண சமிதி என்ற நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். இந்த நிறுவனம் பின்னர் ஹரிஜன் சேவா சங்கம் என மறுபெயரிடப்பட்டது. காந்திஜியின் 1932 மற்றும் 1934 ஆம் ஆண்டு ஒரிசா வருகைகள் மற்றும் கஸ்தூர்பாய், சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத், ஜவகர்லால் நேரு போன்றவர்களிடமும் இவர் ஈடுபட்டிருந்தார். இவர் பாரியில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார், காந்திஜி அதற்கு "சேவகர்" என்று பெயரிட்டார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, இவரது கணவர் கோபபந்து சௌத்ரி உட்பட இரமா தேவியின் முழு குடும்ப உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். கஸ்தூர்பாய் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, கஸ்தூர்பாய் அறக்கட்டளையின் ஒரிசா அத்தியாயத்தின் பிரதிநிதியாக காந்திஜி இவரை நியமித்தார்.
1947இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஆச்சார்யா வினோபா பாவேவின் நிலக்கொடை இயக்கத்தில் இரமா தேவி தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். [7] 1952ஆம் ஆண்டில் இவர் தனது கணவருடன் சேர்ந்து நிலமற்ற மற்றும் ஏழைகளுக்கு நிலத்தையும் செல்வத்தையும் கொடுக்கும் செய்தியை பரப்புவதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 4000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார். [8] [9] [10] [11] [12] 1928 முதல், இரமா தேவி ஜகத்சிங்பூரில் உள்ள அலகா ஆசிரமத்தில் தங்கினார். [13]
இவர் உத்கல் காதி மண்டலத்தை அமைக்க உதவியதுடன், ராம்சந்திரபூரில் ஆசிரியர் பயிற்சி மையத்தையும் ஒரு பால்வாடியையும் நிறுவினார் . 1950ஆம் ஆண்டில் தும்பருகேடாவில் ஒரு பழங்குடி நல மையத்தை அமைத்தார் . 1951 பஞ்சத்தின் போது இவரும் மாலதியும் கோராபுட்டில் பஞ்ச நிவாரணத்தில் பணியாற்றினர். 1962 இந்திய-சீனப் போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவ இவர் பணியாற்றினார்.
நெருக்கடி நிலையின் போது ஹரேகிருஷ்ணா மகதாப் மற்றும் நிலாமணி ரௌத்ரி ஆகியோருடன் தனது சொந்த செய்தித்தாளை வெளியே கொண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தார் . [3] கிராம் சேவக் பதிப்பகம், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டு, ஒரிசாவைச் சேர்ந்த, நபக்ருஷ்ண சவுத்ரி, ஹரேக்ருஷ்ணா மகாதாப், மன்மோகன் சவுத்ரி, திருமதி. அன்னபூர்ணா மகாராணா, ஜெய்க்ருஷனா மொஹந்தி மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். [14]
இவர் கட்டக்கில் சிசு விகார் என்ற ஒரு ஆரம்ப பள்ளியையும் மற்றும் ஒரு புற்றுநோய் மருத்துவமனையையும் நிறுவினார். [3]
தேசத்திற்கான இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இரமாதேவிக்கு 1981ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ஜம்னாலால் பஜாஜ் விருதும் [15] மற்றும் 1984 ஏப்ரல் 16 ஆம் தேதி உத்கல் பல்கலைக்கழகத்தால் தத்துவவியலில் முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.
இவரது நினைவாக புவனேசுவரில் உள்ள இரமாதேவி மகளிர் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டுள்ளது. இது கிழக்கு இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகமாகும். இது 2015 முதல் நிறுவப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் உள்ளது. [16] கட்டாக்கில் இவர் ஆரம்பித்த பள்ளியான சிசு விகார் இப்போது இரமாதேவி சிசு விகார்ர் என்று பெயரிடப்பட்டுள்ளது. [17]
இவர் 1985 சூலை 22இல் இறந்தார். [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.