இனப்பெருக்கம்
From Wikipedia, the free encyclopedia
பெற்றோர் உயிரினத்தில் இருந்து, புதிய உயிரினங்கள் தனியன்களாக உருவாகும் உயிரியல் செயல்முறை இனப்பெருக்கம் எனப்படும். இனபெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படை சிறப்பியல்புகளில் ஒன்று. இதன்மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நுண்ணுயிர்கள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், எனப் பல்வேறு வகையான உயிரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடைமுறைகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன. ஆனால் பொதுவாக, அவை கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் என இருவகைப்படும்.
பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்க முறையில் ஒரு உயிரினம் மற்றொன்றின் பங்களிப்பு இல்லாமல் சார்பற்று இனப்பெருக்கம் செய்ய இயலும். பாலிலா இனப்பெருக்கத்தில் ஒரு செல் உயிரிகளுக்கென்று வரையறைகள் கிடையாது.ஓர் உயிரினத்தின் ஒத்த படியாக்கமானது பாலிலா இனப்பெருக்கத்தின் வடிவமாகும். உயிரினங்களின் பாலிலா இனப்பெருக்கத்தில் மரபொத்த அல்லது ஒரே மாதிரியாக சேய்கள் படியெடுக்கப் படுகின்றன. பாலினப் பெருக்கத்தின் பரிணாம வளர்ச்சியானது உயிரியலாளர்களுக்கு இன்றும் புதிராகவே உள்ளது. பாலினப் பெருக்கத்தின் இருமடித்தொகையில் (Two-Fold Cost) 50% மட்டுமே உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.[1] இவற்றின் மரபுப்பரிமாற்றமும் பாதியளவே (50%) உள்ளது.[2] ஏனெனில் ஆண் பாலினம் சேய்களை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. இதனால் எண்ணிக்கையும் பாதியளவாகவே உள்ளது.
பாலினப்பெருக்கத்தில் இரு உயிரிகளின் பாலணுக்களின் (Gamete) இடைவிளைவு தேவைப்படுகின்றது. ஒரு இயல்பான உயிரணுவின், குன்றல் பகுப்பு மூலம் உருவாக்கப்படும் பாதியளவு நிறப்புரிகளையே (Chromosome) இப்பாலணுக்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இனத்தின் ஆண் பாலணு, பெண் பாலணுவுடன் கருவுறுதலினால் கருவணுவை உருவாக்கும். இதனால் சேய் பெற்றொர்களின் மரபுப் பண்புகளைப் பெறுகின்றது.