இந்தியாவில் இட ஒதுக்கீடு
சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி/வேலையில் இடங்களை ஒதுக்கும் சமூக நீதி திட்டம். / From Wikipedia, the free encyclopedia
இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பதவிகள் என பல்வேறு துறைகளில், இடங்களை அவர்களின் பாதிப்பு நிலை அல்லது பங்கு பெற்றுள்ள நிலை , மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறச் செய்து, காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, சமூகநிலை, மொழி, பாலினம், வாழிடம், பொருளாதாரச் சூழல், மாற்றுத்திறன் போன்றவற்றில், எந்தக் காரணியால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். அவர்கள் பங்கினை உறுதி செய்ய வேலைவாய்ப்பு , அரசியல் பதவிகளில் குறிப்பிட்ட அளவு இடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது.இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள், சொத்து உரிமை மறுக்கப்பட்டு, சமூகரீதியில் தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட வகுப்பினருக்கு பாதிக்கப்பட்ட அளவுக்கேற்பவும், மக்கள் தொகைக்கேற்பவும், உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க இட ஒதுக்கீடு பயன்படுகிறது. வெள்ளையின, கருப்பின ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினாலும் அதன் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல. அனைத்து வகுப்பு மக்களையும் எந்தக் காரணத்தால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணத்தைக் கொண்டு பிரதிநிதித்துவப்படுத்துவதே இட ஒதுக்கீட்டின் முதன்மை நோக்கம் ஆகும்.