![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Athanasius_Kircher%2527s_Atlantis.gif/640px-Athanasius_Kircher%2527s_Atlantis.gif&w=640&q=50)
அட்லாண்டிஸ்
From Wikipedia, the free encyclopedia
அட்லாண்டிசு (Atlantis,பண்டைக் கிரேக்கம்: Ἀτλαντὶς νῆσος, "அட்லாசின் தீவு") பிளேட்டோவின் தைமீயசிலும் கிரிட்டியசிலும் நாடுகளைக் குறித்த ஆவணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள புனைவுத் தீவாகும். பிளேட்டோவின் ஆதர்ச நாட்டின் (காண்க குடியரசு) "தொன்மை ஏதென்சை" முற்றுகையிட்ட எதிராளிகள் இந்தத் தீவிலிருந்து வந்தவர்களாவர். இந்தக் கதையில் வேறெந்த மேற்கத்திய நாடுகளைப் போலன்றி ஏதென்சு அட்லாந்தியர்களின் தாக்குதலை எதிர்த்துத் தடுத்தனர்.[1] இதை ஏதென்சின் மேன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிளேட்டோ விவரித்தார்.[2][3] இக்கதையின் முடிவில் அட்லாண்டிசு கடவுள்களின் அருளை இழந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்குகின்றது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Athanasius_Kircher%27s_Atlantis.gif/320px-Athanasius_Kircher%27s_Atlantis.gif)
பிளேட்டோவின் படைப்பில் இதற்கு முதன்மைத் தரப்படாவிட்டாலும் அட்லாண்டிசு கதை இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேக்கனின் நியூ அட்லாண்டிசு, மோரின் உடோப்பியா போன்ற பல மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் யுடோப்பியப் படைப்புகளில் அட்லாண்டிசு முதன்மையாக இருந்தது.[4] அதேவேளையில், 19ஆம்-நூற்றாண்டில் சில அறிஞர்கள் பிளேட்டோவின் விவரிப்பை வரலாற்று மரபாக எடுத்துக் கொண்டனர்; குறிப்பாக இக்னேசியசு டோனலியின் அட்லாண்டிசு: ஆதிகாலத்து உலகம். பிளேட்டோவின் நிகழ்வுக் காலக்கோடுகள்—அவரது காலத்திற்கும் 9,000 ஆண்டுகளுக்கும் முன்பாக[5]—மற்றும் அட்லாண்டிசின் அமைவிடம் —"ஹேர்க்கியூலிசின் தூண்களுக்கு அப்பால்"—ஆகியவற்றைக் கொண்டு பல போலி அறிவியல் ஊகங்கள் பரவின.[6] இதனையடுத்து, வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களைக் குறித்த கோட்பாடுகளில் அட்லாண்டிசு உரையாடப்படலாயிற்று. தற்கால புனைவுகளில், நகுதிற நூல்களிலிருந்து திரைப்படங்கள் வரை, அட்லாண்டிசு இடம் பிடித்தது.
தற்கால மொழியறிவியலாளர்களும் வரலாற்றாளர்களும் அட்லாண்டிசை கதையின் புனைவுப் பாத்திரமாக ஏற்றுக்கொண்டாலும்,[7] இந்தக் கற்பனைக்கு காரணமானது எதுவென்ற விவாதம் தொடர்கின்றது. பிளேட்டோ தனது உருவகங்களுக்கும் உவமைகளுக்கும்[8] பழைய மரபுகளிலிருந்து எடுத்தாண்டிருப்பதால் அட்லாண்டிசிற்கான மனத்தூண்டுதல் எகிப்திய தேரா எரிமலை வெடிப்பு, கடல் மக்களின் படையெடுப்பு, திராயன் போர் ஆவணங்களிலிருந்து வந்திருக்கலாம் என்பது ஆராயப்பட வேண்டும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[9][10][11][12] மற்றவர்கள் இத்தகைய சிந்தைத் தொடரை மறுத்து பிளேட்டோ இந்த புனைவை துவக்கத்திலிருந்தே உருவாக்கியிருக்கவேண்டும் என வாதிடுகின்றனர்;[13][14][15] ஏதென்சு சிசிலியைத் தாக்குதல் (கி.மு 415–கி.மு 413) அல்லது கி.மு 373இல் ஹெலிக்கெயின் அழிவு போன்ற அவரது காலத்தில் நிகழ்ந்த நடப்புகளை ஒட்டி புனைந்திருக்கலாம் என்கின்றனர்.[16]