மெசொப்பொத்தேமியா
தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
மெசொப்பொதாமியா (Mesopotamia), பண்டைய அண்மை கிழக்கின் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியாகும். இதன் வடக்குப் பகுதிகளை மேல் மெசொப்பொத்தேமியா என்றும், தெற்குப் பகுதிகளை கீழ் மெசொப்பொத்தேமியா என்றும் பிரிப்பர்.
இது இன்றைய ஈராக், சிரியா மற்றும் வடமேற்கு ஈரான், துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. இதன் மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களாலும், வடக்கில் சிஞ்சார் மலைகளாலும் சூழப்பட்ட மேற்சொன்ன டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், சுற்ற தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், அக்காதிய நாகரீகம், பாபிலோனிய நாகரிகம் மற்றும் சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவில் சுமேரியர்கள் அறிமுகப்படுத்திய ஆப்பெழுத்து எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.