தீர்த்தங்கரர்
From Wikipedia, the free encyclopedia
தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். 'பிறவிப்பெருங்கடலைக் கடந்த ஞானி' என்பது பொருள். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.
இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. ரிஷபர் என்பவர் முதல் தீர்த்தங்கரராக அறியப்படுகிறார். மகாவீரர் 24-வது தீர்த்தங்கரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் கொள்கைகள் மற்றும் கூற்றுகளே 'சமணம்' என்ற மதமாக உருவெடுத்திருக்கிறது. தீர்த்தங்கரர்கள் இறைவனின் நிலையைப் பெற்றவர்கள் எனவும், அவர்களை வணங்கும்படியும் சமணமதம் கூறுகிறது. சமணமதத்தைத் தோற்றுவித்தவர் ரிஷபர் என்றும், மகாவீரர் என்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.