தமிழர் மெய்யியல்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்ச் சூழலில், மரபில், தமிழ் மொழியில் முதன்மையாக உருவான மெய்யியல் தமிழர் மெய்யியல் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்த மெய்யியல் தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கினார்கள், விளங்கிக் கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களில், இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியலும் மருவி வந்திருக்கிறது.