பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Provinces of India), பிரித்தானிய இந்தியாவில் முன்பு இதனை இராஜதானிகள் என்றும், இராஜதானி நகரங்கள் என்றும் அழைப்பர். இம்மாகாணங்கள் கிபி 1612 முதல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆகஸ்டு 1947 வரை இருந்தது. மேலும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட 565 சுதேச சமஸ்தானங்களும் இருந்தன. [1]
வரலாற்று கால வரிசைப்படி இம்மாகாணங்களின் ஆட்சியை மூன்றாகப் பிரிப்பர்.
- கிபி 1612 - 1757 ஆண்டுகளுக்கிடைப்பட்ட முகலாயர்கள், மராத்தியப் பேரரசு மற்றும் பிற உள்ளூர் மன்னர்களிடம் அனுமதி பெற்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிகள் கோவா, சூரத், மும்பை, சென்னை, மசூலிப்பட்டினம், கொல்கத்தா, சிட்டகாங் போன்ற, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளின் நிலங்களை குத்தகை அல்லது குறைந்த விலைக்கு வாங்கி தொழிற்சாலைகள், கிடங்கிகள் அமைத்து, ஐரோப்பியப் பொருட்களை இறக்கு செய்து வணிகம் செய்தனர்.
- பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில், சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை (இராஜதானி) நகரங்களாக விளங்கியது.
- 1757 - 1858 கம்பெனி கம்பெனி ஆட்சியின் போது, இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளை, இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, அப்பகுதிகளை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து தங்களது நேரடி ஆட்சியில் நிர்வகித்தனர். வளமற்ற பகுதிகளை, கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும், கம்பெனிக்கு கட்டுப்பட்ட, சுதேச சமஸ்தான மன்னர்களின் ஆட்சியில் விட்டு விட்டனர்.
- இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய பிரித்தானியர்கள் வணிகம் மற்றும் தொழில் செய்வதை படிப்படியாக விட்டு விட்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களாக மாறினர்.
- 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர், கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து, ஆட்சியை பிரித்தானியப் பேரரசு தங்கள் நேரடி பொறுப்பில் எடுத்துக் கொண்டு, இந்தியத் தலைமை ஆளுநரை ஆட்சியாளராக நியமித்து இந்தியாவை ஆண்டனர்.
- கிபி 1858 - 1947 முடிய இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்ற பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, பர்மா மற்றும் ஏடன் துறைமுகப் பகுதிகளை கைப்பற்றி தனது ஆட்சியில் இணைத்துக் கொண்டது.
- இந்தியாவின் பெரும் ஆட்சிப்பரப்புகளை வங்காள மாகாணம், சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணம் என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரித்து ஆண்டனர். [2]