நாதிர் ஷா
ஈரானின் ஷா (ஆட்சி. 1736-1747) மற்றும் அப்சரிய அரசமரபைத் தோற்றுவித்தவர் / From Wikipedia, the free encyclopedia
நாதிர் ஷா அப்சர் (Nader Shah Afshar) (பாரசீக மொழி: نادر شاه افشار, நாதெர் கோலி பெய்க் என்றும் அறியப்படுகிறார் نادرقلیبیگ அல்லது தமஸ்ப் கோலி கான் تهماسبقلی خان; ஆகத்து 1688[6] – 19 சூன் 1747) என்பவர் ஈரானின் அப்சரிய அரசமரபை நிறுவியவர் ஆவார். ஈரானிய வரலாற்றில் மிகுந்த சக்தி வாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராவார். 1736 முதல் 1747 வரை ஈரானின் ஷாவாக இவர் ஆட்சி செய்தார். ஒரு கிளர்ச்சியின் போது இவர் அரசியல் கொலை செய்யப்பட்டார். மத்திய கிழக்கு, காக்கேசியா, நடு ஆசியா மற்றும் தெற்காசியா முழுவதும் பல்வேறு படையெடுப்புகளில் இவர் சண்டையிட்டுள்ளார். ஹெறாத், மிகமந்துசுது, முர்ச்சே கோர்து, கிருகுக்கு, எகெவர்து, கைபர் கணவாய், கர்னால், மற்றும் கர்சு ஆகியவை இவர் சண்டையிட்ட சில யுத்தங்களாகும். இவரது இராணுவ அறிவு[14] காரணமாக சில வரலாற்றாளர்கள் இவரைப் பாரசீகத்தின் நெப்போலியன், பாரசீகத்தின் வாள்[15] அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று குறிப்பிட்டுள்ளனர். நாதிர் துருக்கோமென்[16] அப்சர் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். வடகிழக்கு ஈரானில்[17] குராசானில் குடியமர்ந்த ஒரு பகுதியளவு நாடோடிப் பழங்குடியினமாக அப்சர்கள் இருந்தனர். இவர்கள் ஷா முதலாம் இசுமாயிலின் காலம் முதல் சபாவிய அரசமரபுக்கு இராணுவ சக்தியை வழங்கியவர்களாக இருந்தனர்.[18]
நாதிர் ஷா | |
---|---|
| |
நாதிர் ஷா ஓவியம், ஓவியர் அபு அல் அசன், சிறந்த கலைகளின் அருங்காட்சியகம், தெகுரான் | |
ஈரானின் ஷா | |
ஆட்சிக்காலம் | 8 மார்ச் 1736 – 20 சூன் 1747[3] |
முடிசூட்டுதல் | 8 மார்ச் 1736[4] |
முன்னையவர் | மூன்றாம் அப்பாசு |
பின்னையவர் | அதெல் ஷா |
பிறப்பு | 22 நவம்பர் 1688 அல்லது 6 ஆகத்து 1698[5][6] தருகசு, சபாவிய ஈரான்[7] |
இறப்பு | 20 சூன் 1747[8] (அகவை 48 அல்லது 58) குச்சான், அப்சரித்து ஈரான் |
புதைத்த இடம் | நாதிர் ஷா சமாதி, மசாத், ஈரான் |
இராணி | ரசிய பேகம் சபாவி |
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | அப்சர் குடும்பம் |
தந்தை | எமாம் கோலி |
மதம் |
|
முத்திரை |
பலவீனமான ஷ சொல்தான் ஒசெய்னை கோதாகி பஷ்தூன் மக்கள் ஒரு கிளர்ச்சிக்குப் பிறகு பதவியில் இருந்து தூக்கி எறிந்ததை அடுத்து ஈரானில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இக்காலத்தின் போது நாதிர் ஷா அதிகாரத்திற்கு வந்தார். சபாவியரின் பரம எதிரிகளான உதுமானியர்கள், மேலும் உருசியர்கள் ஆகியோர் ஈரானின் நிலப்பரப்பைத் தங்களுக்கு கைப்பற்றிக் கொண்டனர். ஈரான் நாட்டை நாதிர் மீண்டும் ஒன்றிணைத்தார். ஊடுருவியவர்களை அகற்றினார். சபாவிய அரசமரபின் கடைசி உறுப்பினர்களை அகற்றுமாறு முடிவெடுக்கக் கூடிய அளவுக்கு இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக உருவானார். சபாவிய அரசாங்கமானது ஈரானை 200க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. 1736இல் ஷாவாக தனக்குத் தானே நாதிர் முடி சூட்டிக் கொண்டார். இவரது ஏராளமான படையெடுப்புகள் ஒரு பேரரசை உருவாக்கின. இது அதன் உச்சபட்ச விரிவாக்கத்தின் போது ஈரான், ஆர்மீனியா, அசர்பைஜான், சியார்சியா, வட காக்கேசியா, ஈராக், துருக்கி, துருக்மெனித்தான், ஆப்கானித்தான், உசுபெக்கிசுதான், பாக்கித்தான், ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகள் ஆகியவற்றை முழுவதுமாகவோ அல்லது அவற்றின் பகுதிகளையோ குறுகிய காலத்திற்குத் தன் பகுதிகளாகக் கொண்டிருந்தது. இவருடைய இராணுவச் செலவினங்கள் ஈரானியப் பொருளாதாரம் மீது சிதிலமடைய வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின.[19]
நாதிர் ஷா செங்கிஸ் கான் மற்றும் தைமூரைப் பின்பற்றினார். இவர்கள் நடு ஆசியாவின் முந்தைய துரந்தரர்களாக இருந்தனர். இவர்களது இராணுவ செயலாற்றலை இவரும் பின்பற்றினார். குறிப்பாக இவரது ஆட்சியின் பிற்காலத்தில் அவர்களது குரூரத் தன்மையைப் பின்பற்றினார். இவரது படையெடுப்புகளின் போது இவர் பெற்ற வெற்றிகள் குறுகிய காலத்திற்கு இவரை மேற்கு ஆசியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த இறையாண்மையுள்ள ஆட்சியாளராக மாற்றின. விவாதத்திற்குரிய வகையில் இருந்தாலும், உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த பேரரசு மீது இவர் ஆட்சி செய்தார்.[20]:84 1747இல் இவர் அரசியல் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு இவர் தோற்றுவித்த பேரரசு மற்றும் அரசமரபானது சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது.[21]
"ஆசியாவின் மகா இராணுவத் துரந்தரர்களில் கடைசியானவராக" நாதிர் ஷா குறிப்பிடப்படுகிறார்.[22]