தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம்
From Wikipedia, the free encyclopedia
தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை அல்லது செயற்கை தேர்வு (Selective breeding) அல்லது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட தோற்ற அமைப்புக்குரிய பண்புக்கூறுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மரபுப்பண்புகளோடு இணைத்து மறு உருவாக்கம் செய்ய மனிதர்கள் பயன்படுத்தப்படும் ஓர் இனப்பெருக்கச் செயல்முறையாகும். பொதுவாக வளர்ப்புப் விலங்குகள் எனப்படும் கால்நடைக்கும், தாவர வளர்ப்புக்கும் விலங்குகள் அல்லது தாவரங்களின், ஆண், பெண் இரண்டையும் ஒன்றாக வளர்ப்பதன் மூலம் அவை தானாகவே பாலியல் இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும். இதற்காக வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் வளர்ப்பு விலங்குகள் எனப்படும். இதில் தொழில் முறை வளர்ப்பாளர்கள் ஈடுபடுவார்கள். அதேபோல, தொழில்முறை வளர்ப்பாளர்களால் வளர்க்கப்படும் தாவர இனங்கள் வீரிய ஒட்டு வகைகள் எனப்படும். பொதுவாக, இவை தாவரப் பல்வகைமை, பயிரிடு வகைகள் என அழைக்கப்படுகின்றன.
இரண்டு வெவ்வேறு விலங்கினங்களின் இரண்டு தேர்ந்தெடுக்கபட்ட பண்புக்கூறுகள் இணைந்து உருவாகும் புதிய பண்புக்கூறுள்ள விலங்குகள் கலப்பினங்கள் எனப்படுகின்றன. மலர்கள், காய்கறிகள் பழ மரங்கள் ஆகியவற்றின் வீரிய ஒட்டுவகைகள், தொழில்சாரா, வணிக முறையான அல்லது வணிக முறையற்ற வல்லுனர்களால் உருவாக்கப்படலாம். வழக்கில் உள்ள முதன்மையான பயிர்கள் வழக்கமாக தொழில்முறையாளர்களின் கலப்பினங்களாகவே அமைகின்றன.
கால்நடை வளர்ப்பில் உள்ளினச்சேர்க்கை , மரபுவழித்தொடர் இனப்பெருக்கம், வேற்றினச் சேர்க்கை ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதே போன்ற முறைகள் தாவர வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. 1859 ஆம் ஆண்டு வெளியிட்ட உயிரினங்களின் தோற்றம் (நூல்) என்ற தனது நூலில், மாற்றங்களை உருவாக்குவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் எவ்வாறு வெற்றிகரமாக இருந்தது என்பதை சார்லஸ் டார்வின் விவாதிக்கிறார். அந்நூலின் முதல் அத்தியாயத்தில் வீட்டு வளர்ப்பு விலங்குகள், அதாவது புறாக்கள், பூனைகள் , கால்நடை, மற்றும் நாய்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. டார்வின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வலுப்படுத்த மரபான செயற்கைத் தேர்வு வழிமுறையைப் பயன்படுத்தினார்.[1]
வேளாண்மையிலும் உயிரியல் ஆய்வுகளிலும் விரும்பும் விளைவை உருவாக்குவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. இது மிகவும் இன்று மிகவும் வழமையாக மாறிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் எதிர்பாராத விதமாகவும் முடியலாம். பயிர் விளைச்சல் முறையின் விளைவாக விரும்பத்தக்க அல்லது விரும்பத்தகாத விளைவுகள் உருவாகி இருக்கலாம் . எடுத்துகாட்டாஎக, சில கூலங்களில் விதை அளவை அதிகரிக்க பெரிய விதைகளை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சில உழுதல் நடைமுறைகள் மூலங்கூட பெரிய விதைகளை உருவாகச் செய்திருக்கலாம். பெரும்பாலும், தாவர வளர்ப்பில் இயற்கை , செயற்கை காரணிகளுக்கு இடையே இடைவிடாத தொடர் உறவு இருந்தே வந்துள்ளது.[2]