சூவே குகை
வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்களைக் கொண்ட பிரெஞ்சுக் குகை / From Wikipedia, the free encyclopedia
சூவே-பூ-தார்க் குகை (பிரெஞ்சு மொழி: Grotte Chauvet-Pont d'Arc, பிரெஞ்சு உச்சரிப்பு: [ɡʁɔt ʃovɛ pɔ̃ daʁk]) என்பது தென்மேற்குப் பிரான்சின் அர்தேசு திணைக்களத்தில் அமைந்துள்ள ஒரு குகையாகும். இக் குகை உலகின் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ள உருக்களுடனான குகை ஓவியங்கள் சிலவற்றையும்,[1] மேலைப் பழங்கற்கால வாழ்க்கை தொடர்பான ஆதாரங்களையும் கொண்டுள்ளது.[2] இது வலூ-பூ-தார்க் கொமியூனுக்கருகில், ஆர்தேசு ஆற்றின் முன்னைய ஆற்றுப் படுகையின் மேலுள்ள சுண்ணாம்புப் பாறைச் சரிவின் மேல், கோர்சசு த லார்தேசில் அமைந்துள்ளது.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
அமைவிடம் | ஆர்தேசு, பிரான்சு |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: i, iii |
உசாத்துணை | 1426 |
பதிவு | 2014 (38-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 9 ha |
Buffer zone | 1,353 ha |
Website | archeologie |
ஆள்கூறுகள் | 44°23′15″N 4°24′51″E |
டிசம்பர் 18, 1994ல் கண்டறியப்பட்ட இது மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் கலையைக் கொண்ட களமாகக் கருதப்படுகிறது. ஐ.நா.வின் பண்பாட்டு முகவர் அமைப்பான யுனெசுகோ, இக் களத்தை சூன் 22, 2014ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[3] முதன்முதலில் இக்குகை, மூன்று குகை ஆய்வாளர்களான, எலியட் புரூனல்-தெசாம்ப்சு, கிறித்தியன் இல்லயர் மற்றும் சீன்-மரீ சூவே ஆகியோரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இவர்களுள் சூவேவின் பெயரேஎ இக்குகைக்குச் சூட்டப்பட்டது. ஆறு மாதங்களின் பின் "லெ த்ரோ த பாபா" ("பாபாவின் துளை") என அறியப்படும் ஒரு துளை மிச்செல் ரோசா (பாபா) என்பவரால் கண்டறியப்பட்டது.[4] பின்னொரு நாளில் இக்குழு சூவே குகைக்கு மீண்டும் சென்றது. இந்த குழுவின் மற்றொரு உறுப்பினரான மைக்கேல் சாபாட் ஏனைய இருவருடன் சேர்ந்து குகைக்குள் மேலும் பயணித்து இதன் இறுதி அறையான சிங்கங்களின் காட்சியகத்தைக் கண்டுபிடித்தார். இக் கண்டறிதல் பற்றிய முழுமையான தகவல்களை சூவே தனது குறிப்புகளில் கொண்டுள்ளார்.[5] ஓவியங்கள் மற்றும் பிற மனித சான்றுகளுக்கு மேலதிகமாக, பல்வேறு விலங்குகளின் புதைபடிவ எச்சங்கள், அச்சுக்கள் மற்றும் அடையாளங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் சில விலங்குகள் இப்போது அழிந்துவிட்டன.
பிரெஞ்சுத் தொல்பொருள் ஆய்வாளர் சீன் க்ளோட்டெசின் மேலதிக ஆய்வுகள் மூலம் இந்த தளம் பற்றி அதிகம் தெரியவந்துள்ளது. இவற்றின் காலப்பகுதிகள் பற்றிய தகவல்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தன. எனினும், 2012 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு இவ் ஓவியங்கள் அண்ணளவாக 32,000-30,000 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட ஒரிகுனேசியக் காலப் பகுதியைச் சேர்ந்ததாகக் கணிப்பிட்டது. கூடுதலாக 88 ரேடியோ கார்பன் திகதிகளைப் பயன்படுத்தி 2016 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இரண்டு குடியிருப்புக் காலகட்டங்களைக் காட்டியது. ஒன்று 37,000 முதல் 33,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் மற்றையது 31,000 முதல் 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் கணிப்பிட்டது. பெரும்பாலான கறுப்பு வரைபடங்கள் முதலாவது காலகட்டத்தைச் சேர்ந்தனவாகும்.