சிவாஜி (பேரரசர்)
மராத்தியப் பேரரசைத் தோற்றுவித்தவர் (ஆட்சி. 1674-1680) / From Wikipedia, the free encyclopedia
முதலாம் சிவாஜி போன்சலே[5] என்பவர் ஓர் இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மராத்தா சமூகத்தின் போன்சலே குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். பீஜாப்பூரின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதில்ஷாகி சுல்தானகத்திலிருந்து தனது சொந்த சுதந்திர இராச்சியத்தைச் சிவாஜி உருவாக்கினார்.[6] இதுவே மராத்தியப் பேரரசின் தொடக்கமாக அமைந்தது. 1674ஆம் ஆண்டு அலுவல்ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்.[7]
முதலாம் சிவாஜி | |
---|---|
சகக்கர்த்தா[1] ஐந்தவ தர்மோத்தரக்[2] | |
பிரித்தானிய அருங்காட்சியகத்தின் திரட்டுகளிலிருந்து சிவாஜியின் உருவப்படம் (1680கள்), | |
மராட்டியப் பேரரசின் முதல் பேரரசர் (சத்திரபதி) | |
ஆட்சிக்காலம் | 1674–1680 |
முடிசூட்டுதல் | 6 சூன் 1674 (முதலாம்) 24 செப்டம்பர் 1674 (இரண்டாம்) |
முன்னையவர் | புதிய பதவி உருவாக்கம் |
பின்னையவர் | சம்பாஜி |
பெஷ்வா | மோராபந்த் திரியம்பக் பிங்ளே |
பிறப்பு | 19 பெப்ரவரி 1630 சிவனேரி, அகமதுநகர் சுல்தானகம் (தற்போதைய புனே, மகாராட்டிரம், இந்தியா) |
இறப்பு | 3 ஏப்ரல் 1680 (அகவை 50) ராய்கட் கோட்டை, மகத், மராட்டியப் பேரரசு (தற்போதைய மகாராட்டிரம், இந்தியா) |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் | 8[4] (சம்பாஜி மற்றும் முதலாம் இராஜாராம் உட்பட) |
மரபு | போன்சலே |
தந்தை | சாகாஜி போஸ்லே |
தாய் | ஜிஜாபாய் |
மதம் | இந்து சமயம் |
தன் வாழ்நாளில் முகலாயப் பேரரசு, குதுப் ஷாஹி வம்சம், பீஜப்பூர் சுல்தானகம் மற்றும் ஐரோப்பியக் காலனிய சக்திகளுடன் கூட்டணிகளையும் எதிர்ப்புகளையும் சிவாஜி ஏற்படுத்தினார். மராத்தியச் செல்வாக்குப் பகுதிகளைச் சிவாஜியின் இராணுவப்படைகள் விரிவாக்கின. கோட்டைகளைக் கைப்பற்றவும், புதிதாகக் கட்டவும் செய்தன. மராத்தியக் கப்பற்படையை உருவாக்கின. நன் முறையில் கட்டமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளையுடைய ஒரு செயல்திறன்மிக்க முற்போக்கு மனப்பான்மையுள்ள ஆட்சிமுறையை சிவாஜி நிறுவினார். பண்டைய இந்து அரசியல் பாரம்பரியங்கள், அரசவை மரபுகள் ஆகியவற்றுக்குப் புத்துயிர் கொடுத்தார். அரசவை மற்றும் நிர்வாகத்தில் பாரசீகத்தை நீக்கிவிட்டு, மராத்தி மற்றும் சமசுகிருதப் பயன்பாட்டை ஊக்குவித்தார்.[7][8]