கொன்றுண்ணல்
From Wikipedia, the free encyclopedia
சூழலியலில் கொன்றுண்ணல் அல்லது இரை பிடித்துண்ணல் (predation) என்பது, தாக்கப்படும் உயிரினமான ஒரு இரைக்கும் (prey), தாக்கும் உயிரினமான ஒரு இரை பிடித்துண்ணி அல்லது கொன்றுண்ணிக்கும் (predator) இடையிலான உயிரியல் தொடர்பு என விளக்கப்படுகின்றது[1]. கொன்றுண்ணிகள் உண்பதற்கு முன் இரையைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் விடலாம். ஆனாலும் இரை பிடித்துண்ணும் செயல் முறையில் இரையானது இறுதியில் இறப்புக்குள்ளாகி, அவற்றின் இழையங்கள் இரை பிடித்துண்ணியினால் உட்கொள்ளப்பட்டுவிடும்[2].
இன்னொரு வகை இறந்த உயிர் எச்சங்களை உண்ணுதல் (பிணந்தின்னல்) ஆகும். இவ்விரு உண்ணும் நடத்தைகளையும் வேறுபடுத்துதல் சில சமயங்களில் கடினமானது. எடுத்துக் காட்டாகச் சில ஒட்டுண்ணிகள் ஓம்புயிர்களில் உணவைப் பெற்றுக்கொண்டபின் அவற்றின் இறந்த உடல்களில் இளம் ஒட்டுண்ணிகள் உணவு பெறுவதற்காக அங்கேயே முட்டைகளையும் இடுகின்றன. கொன்றுண்ணலின் முக்கியமான இயல்பு, இரை உயிர்களில் கொன்றுண்ணிகள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். பிணந்தின்னிகள், கிடைப்பதை உண்கின்றனவேயன்றி உண்ணப்படும் உயிரினங்களில் நேரடியான தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவது இல்லை.