குத்புத்தீன் ஐபக்
தில்லி சுல்தானகத்தின் தளபதி மற்றும் ஆட்சியாளர் (1150-1210) (ஆட்சி. 1206-1210) / From Wikipedia, the free encyclopedia
குத்புத்தீன் ஐபக் (Qutb ud-Din Aibak) (பாரசீக மொழி: قطبالدین ایبک), (1150 – 14 நவம்பர் 1210) என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். வட இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளுக்கு இவர் பொறுப்பேற்று இருந்தார். 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவினார். அடிமை அரசமரபை தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது.
குத்புத்தீன் ஐபக் | |
---|---|
லாகூரின் அனார்கலி பசாரில் குத்புத்தீன் ஐபக்கின் சமாதி | |
தில்லியின் முதல் சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 25 சூன் 1206 – 14 நவம்பர் 1210 |
முடிசூட்டுதல் | 25 சூன் 1206, கசரே உமாயூன், லாகூர் |
முன்னையவர் | கோரின் முகம்மது |
பின்னையவர் | ஆராம் ஷா |
பிறப்பு | 1150 துருக்கிசுத்தான் |
இறப்பு | 14 நவம்பர் 1210 (அகவை 60) லாகூர், தில்லி சுல்தானகம் (தற்கால லாகூர், பாக்கித்தான்) |
புதைத்த இடம் | அனார்கலி பசார், லாகூர் |
துருக்கிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் குழந்தையாக இருந்த போது அடிமையாக விற்கப்பட்டார். ஈரானின் நிசாபூரில் ஒரு நீதிபதியால் இவர் விலைக்கு வாங்கப்பட்டார். அங்கு இவர் வில்வித்தை, குதிரை ஏற்றம் போன்ற திறமைகளை கற்றார். காசுனியில் முகம்மது கோரியிடம் இவர் மீண்டும் ஒரு முறை இறுதியாக விற்கப்பட்டார். அரசரின் குதிரை லாயத்தில் அதிகாரி என்ற நிலைக்கு அங்கு இவர் உயர்ந்தார். குவாரசமிய-கோரி போர்களின் போது சுல்தான் ஷாவின் ஒற்றர்களால் இவர் பிடிக்கப்பட்டார். கோரி வெற்றிக்கு பிறகு இவர் விடுதலை செய்யப்பட்டார். முகம்மது கோரி இவருக்கு அதிக ஆதரவு அளித்தார்.
1192இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். சௌகான்கள், ககதவாலர், சாளுக்கியர், சந்தேலர் மற்றும் பிற இராச்சியங்களில் உள்ள பல்வேறு இடங்கள் மீது ஊடுருவல் நடத்தியது மற்றும் வென்றது ஆகியவற்றின் மூலம் வட இந்தியாவில் கோரி அரசமரபின் சக்தியை ஐபக் விரிவாக்கினார்.
மார்ச் 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு வட மேற்கு இந்தியாவில் கோரி நிலப் பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டார். இந்த சண்டையின் போது இவர் காசுனி வரை முன்னேறினார். எனினும், பிறகு பின் வாங்கினார். தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூதுவின் முதன்மை நிலையை இவர் பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை மகுமூது அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.
ஐபக்கிற்கு பிறகு ஆராம் ஷா பதவிக்கு வந்தார். பிறகு ஐபக்கின் முன்னாள் அடிமையும், மருமகனுமான இல்த்துத்மிசு பதவிக்கு வந்தார். இந்தியாவின் கட்டிறுக்கமற்ற கோரி நிலப்பரப்புகளை ஒரு சக்தி வாய்ந்த தில்லி சுல்தானகமாக இல்த்துத்மிசு மாற்றினார். தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியை தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார்.