அசோகர்
மௌரிய அரசமரபின் 3வது பேரரசர், புத்த மதத்தின் புரவலர் / From Wikipedia, the free encyclopedia
அசோகர் என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட மௌரியப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பொதுவாக பேரரசர் அசோகர் என்று அறியப்படுகிறார். இவர் அண். பொ. ஊ. மு. 268 முதல் அண். பொ. ஊ. மு. 232 வரை ஆட்சி புரிந்தார். இவரது பேரரசானது இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பெரும் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அது மேற்கில் தற்போதைய ஆப்கானித்தான் முதல் கிழக்கில் தற்போதைய வங்காளதேசம் வரை பரவியிருந்தது. இவரது பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இவர் பௌத்தத்தின் புரவலராக விளங்கினார். பண்டைக் கால ஆசியா முழுவதும் பௌத்தத்தைப் பரப்பியத்தில் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அசோகர் | |
---|---|
பியாதசி தேவனாம்பிரியா சக்கரவர்த்தி | |
சாஞ்சியின் அண். பொ. ஊ. மு./பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டு தூபி. அசோகரை அவரது தேரில் காண்பிக்கிறது. இராமகிராமத்தில் நாகர்களைச் சந்திக்கிறார்.[1][2] | |
3ஆம் மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | அண். 268 – அண். 232 பொ. ஊ. மு.[3] |
முடிசூட்டுதல் | பொ. ஊ. மு. 268[3] |
முன்னையவர் | பிந்துசாரர் |
பின்னையவர் | தசரத மௌரியர் |
பிறப்பு | அண். பொ. ஊ. மு. 304 பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) |
இறப்பு | அண். பொ. ஊ. மு. 232 (அகவை அண். 71 – 72) பாடலிபுத்திரம் |
வாழ்க்கைத் துணைகள் |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
அரசமரபு | மௌரிய அரசமரபு |
தந்தை | பிந்துசாரர் |
தாய் | சுபத்ரங்கி அல்லது தர்மா[note 1] |
மதம் | பௌத்தம்[4] |
குறிப்பு
|
அசோகர் குறித்த பெரும்பாலான தகவல்கள் இவரது பிராமி கல்வெட்டுகளிலிருந்தும், இவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட பௌத்த புராணங்களிலிருந்தும் வருகின்றன. பண்டைக்கால இந்தியாவில் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட நீண்ட கல்வெட்டுகளில் இவையும் ஒன்றாகும். அசோகர் பிந்துசாரரின் மகனும், மௌரிய அரசமரபைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியரின் பேரனும் ஆவார். இவரது தந்தையின் ஆட்சியின் போது நடு இந்தியாவின் உஜ்ஜைனின் ஆளுநராக இவர் சேவையாற்றினார். சில பௌத்த புராணங்களின் படி, ஓர் இளவரசராக தக்சசீலத்தில் ஒரு கிளர்ச்சியையும் இவர் அடக்கினார்.
அசோகரின் கல்வெட்டுகள் இவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டின் (அண். பொ. ஊ. மு. 260) போது இவர் கலிங்கத்தை ஒரு மிருகத்தனமான போருக்குப் பின் வென்றார் என்று குறிப்பிடுகின்றன. போரால் ஏற்பட்ட அழிவானது இவர் வன்முறையைக் கைவிடக் காரணமானது. கலிங்கப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இவரது கல்வெட்டுகளில் இத்தகவல் சேர்க்காது விடப்பட்டுள்ளது. கலிங்க மக்களுக்கு முன்னாள் தான் வருந்துவது அரசியல் ரீதியாகத் தேவையற்றது என்றோ அல்லது இவரது கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் முழுத் துல்லியமற்றவை என்பதாலோ மற்றும் மற்ற பகுதிகளின் மக்களின் நன் மதிப்பைப் பெறுவதற்காகவோ இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அசோகர் இறுதியாகத் தம்மம் அல்லது நன்னடத்தையை பரப்புவதை மிகுதியாக நேசித்தார். இவருடைய கல்வெட்டுகளின் முக்கியக் கருத்தாக இது உள்ளது.
அசோகரின் கல்வெட்டுகள் கலிங்கப் போருக்கு ஒரு சில ஆண்டுகள் கழித்து, பௌத்தத்தை நோக்கி இவர் படிப்படியாக இழுக்கப்பட்டார் என்பதைப் பரிந்துரைக்கின்றன. கலிங்கப் போரை பௌத்த புராணங்கள் குறிப்பிடவில்லை. மற்ற சமய நம்பிக்கைகளின் தலைவர்களிடத்தில் மன நிறைவு கொள்ளாததற்குப் பிறகு அல்லது பௌத்தத் தலைவர்களால் நடத்தப்பட்ட அதிசயங்களைக் கண்டதற்குப் பிறகு அசோகர் பௌத்தத்திற்கு மதம் மாறினார் என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றன. ஒரு பெரும் எண்ணிக்கையிலான தூபிக்களை நிறுவியதற்காகவும், மூன்றாம் பௌத்த சங்கத்திற்குப் புரவலராக விளங்கியதற்காகவும், பௌத்தத் தூதுவர்களுக்கு ஆதரவளித்ததற்காகவும், பௌத்த சங்கத்திற்கு ஈகைக் குணத்துடன் நன்கொடை அளித்ததற்காகவும் மற்றும் பௌத்தர் அல்லாதவர்களை இடர்ப்படுத்தியதற்காகவும் கூட அசோகரை இப்புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவீன வரலாற்றாளர்கள் மத்தியில் இந்தப் புராணங்களில் வரலாற்றுத் தன்மையானது விவாதிக்கப்படுகிறது. இப்புராணங்கள் கல்வெட்டுக்களுடன் ஒத்துப் போவதில்லை மற்றும் சில நேரங்களில் ஒரு புராணம் மற்றொரு புராணத்துடன் ஒத்துப் போவதில்லை. இவை ஏராளமான புராண மரபியலைக் கொண்டுள்ளன. பௌத்தத்திற்கு மாறுவதற்கு முன் அசோகரின் மோசமான தன்மையையும், பௌத்தத்திற்கு மாறியதற்குப் பின் அவரது பக்தியையும் மிகைப்படுத்திக் கூறுகின்றன. அசோகரின் சொந்தக் கல்வெட்டுகள் இவர் பௌத்ததிற்கு ஆதரவு அளித்தார் என்பதைப் பரிந்துரைக்கின்றன. ஆனால், மேலும் பிராமணியம், சமணம் மற்றும் ஆசீவகம் உள்ளிட்ட பிற முதன்மையான சமகால நம்பிக்கைகளுக்கும் புரவலராக விளங்கினார் என்பதையும் குறிப்பிடுகின்றன.
ஒரு வரலாற்று ரீதியான மன்னனாக அசோகரின் வாழ்வானது கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பிராமி எழுத்துமுறை புரிந்தறியப்பட்டதற்குப் பிறகு இந்நிலை மாறியது. அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரியதர்சி மற்றும் தேவனாம்பிரியர் ஆகிய பட்டங்களைப் பௌத்த புராணங்களுடன் வரலாற்றாளர்கள் தொடர்புபடுத்தியுள்ளனர். இந்தியப் பேரரசர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக அசோகரின் மதிப்பை நிறுவினர். நவீன இந்தியாவின் சின்னமாக அசோகரின் சிங்கத் தூபி பயன்படுத்தப்படுகிறது.
அசோகரின் கல்வெட்டுகள் தவிர இவரது வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள இவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டின் அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய "அசோகரின் கதை") மற்றும் இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன. "அசோக மரத்துடன்" தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]